ரெடியா இருங்க! அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் இதேபோல திருத்த நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல் வீடு, வீடாக சென்று புதியதாக வாக்காளர் பட்டியலை உருவாக்குவதைத்தான் சிறப்பு தீவிர திருத்தம் என்று சொல்வார்கள்.

பீகாரில் இந்த பணிகளின்போது ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள், வங்கதேச எல்லையில் உள்ள பகுதிகளில் ஆதாரை ஏற்க மறுத்தனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆதாரை ஏற்க உத்தரவிட்டது. அதேபோல, பீகாரின் வடகிழக்கு பகுதியான சீமாஞ்சலில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து வாக்கு திருட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியான விமர்சனங்களை அடுக்கினார். இப்படியாக ஏராளமான பஞ்சாயத்துக்களை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் இழுத்து வந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்தான் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. அப்பொழுது சிறப்பு தீவிர திருத்தத்திற்கு வரும் அக்டோபர் 30ம் தேதி கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் திருத்தப்பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பின் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் குடியேறியவர்களை கண்டுபிடித்து வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர் இருப்பின் நீக்கம் செய்ய, இந்த சிறப்பு தீவிர திருத்தம் பயன்படும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications