மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? நவம்பர் இறுதியில் வாக்குப் பதிவு?
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளை அல்லது அடுத்த சில நாட்களில் அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் நடத்தப்படும் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலின் போதே மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை பதவிக் காலம் நவம்பர் 26-ந் தேதியும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் டிசம்பர் 29-ந் தேதியும் முடிவடைகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் மொத்தம் 288 இடங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள்.
மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள்:
பாஜக- 105
ஒருங்கிணைந்த சிவசேனா - 56
ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் - 54
காங்கிரஸ் 44
மஜ்லிஸ் கட்சி 2
மகாராஷ்டிரா சட்டசபையில் தற்போதைய கட்சிகள் பலம்
பாஜக - 102
அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்- 40
ஏக்நாத் ஷிண்டேசிவசேனா- 38
காங்கிரஸ் 44
உத்தவ் தாக்கரே சிவசேனா- 16
சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 12
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் மொத்த இடங்கள் 81. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41.
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30
பாஜக -25
காங்கிரஸ் 16
ஜார்க்கண்ட் சட்டசபையில் கட்சிகளின் தற்போதைய பலம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30
பாஜக -26
காங்கிரஸ்-18
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைக்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ம் ஆண்டு தேர்தலைவிட தற்போதைய தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூ,ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட பல கட்சிகள் களம் காண இருக்கின்றன. இதனால் இரு மாநில தேர்தல் களங்களும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த பின்னணியில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதியை நாளை அல்லது அடுத்த சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். அடுத்த மாதம் 2-வது அல்லது 3-வது வாரங்களில் இரு மாநிலங்களிலும் வாக்குப் பதிவு நடத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications