நாளை மறுநாள் வெளியாகிறது தேர்தல் தேதி அட்டவணை ?... தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அட்டவணையை 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது மார்ச் மாதம் 5-ஆம் தேதி அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் 5 ஆம் தேதி அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடிக்கு சாதகமாகத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதப்படுத்தப்படுகிறது என்றும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தேர்தல் ஆணையம்
மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த சுற்றுப் பயணம் முடிந்த பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில்லை
இதற்கு விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், நாங்கள் பிரதமர் அலுவலகம் ஆலோசனைப்படி செயல்படுகிறோம் என்பதில் உண்மையில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் அட்டவணையை தயார் செய்து விட்டதாகவும் உரிய நேரத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அட்டவணை
இதற்கிடையே, டெல்லியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அந்த திட்ட அறிவிப்புகள் ஒப்புதல் பெற்ற பிறகு அரசிதழில் முறைப்படி வெளியிட ஒரு நாள் அவகாசம் தேவை என்பதால் 8 ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த தேர்தல் அட்டவணையை ஒரு நாள் தள்ளி 9 ஆம் தேதி வெளியிடுவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 கட்டங்களாக தேர்தல்
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நடத்தப்பட்டது . ஆனால் இந்த முறை 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications