முடிவிற்கு வரும் 52 வருட அரசியல்.. அரசியலில் ஓய்வு பெறும் காங். ஏகே அந்தோணி.. சோனியாவிற்கு நன்றி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏகே அந்தோணி அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், சோனியா காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கேரளாவை சேர்ந்தவர் ஏகே அந்தோனி 81. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் 3 முறை கேரள முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டு இருந்தார்.
இந்நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார். இதன்மூலம் அவரது 52 ஆண்டுகால அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அவர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியலில் ஓய்வு
‛‛ராஜ்யசபாவில்(மாநிலங்களவை) காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த எனக்கு வழங்கிய வாய்ப்புக்காக சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். தற்போது எனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் ராஜ்யசபா பதவியில் அமர நான் விரும்பவில்லை. அரசியலில் ஓய்வு பெறுவது குறித்து சோனியா காந்தியிடம் 2 மாதங்களுக்கு முன்பு கூறினேன். மேலும் கடந்த மாதம் கேரளா வந்தபோது எனது ஆதரவாளர்கள், சகாக்களிடம் கூறினேன். அரசியல் மற்றும் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. தற்போதைய பதவிக்காலம் முடிந்தவுடன் ஏப்ரல் மாதம் டெல்லியில் இருந்து கிளம்ப உள்ளேன். திருவனவந்தபுரத்தில் வசிக்க உள்ளேன்'' என்றார்.

இளம் வயது முதல்வர்
இவர் 1970ல் கேரளாவில் அரசியலை துவக்கினார். காங்கிரஸ் கட்சியில் நேர்மையான தலைவர்களில் ஒருவராக மாறினார். முன்னதாக இந்திரா, ராஜீவ் காந்தியுடன் நல்உறவு வைத்திருந்தார். சோனியா காந்தியின் நம்பகத்தன்மையை பெற்றார். முதன் முறையாக 1970ல் கேரளாவில் எம்எல்ஏ ஆனார். 1977ல் 37வது வயதில் கேரளாவின் இளம்வயது முதல்வரானார். 3 முறை முதல்வராக செயல்பட்டுள்ளார். 10 ஆண்டுகளாக காங்கிரஸின் கேரள மாநில தலைவராகவும் செயல்பட்டார்.

புதிய கட்சி
1978ல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு, கேரளாவில் கூட்டணி ஆட்சியை வழிநடத்திய காங்கிரஸ் (யு) முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 1978 இடைத்தேர்தலில் இந்திரா காந்திக்கு கட்சி அளித்த ஆதரவை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது எமர்ஜென்சியை வாபஸ் பெறும்படி ஏகே அந்தோணியும் கூறினர். மேலும் அவர் காங்கிரஸ் (ஏ) என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். பின்னர் இது காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திரா காந்தி கலந்து கொண்டார்.

மத்திய அமைச்சர்
2006 முதல் 2014 வரை ராணுவத்துறை அமைச்சராக இருந்தார். இந்தியாவில் அதிக ஆண்டுகள் ராணுவத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் இவர் தான். ஐந்து முறை ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்தபோது காங்கிரஸ் கோர் கமிட்டியிலும் அங்கம் வகித்தார். 2014ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில் பல தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினாலும், இவர் செல்லவில்லை. இதன்மூலம் காங்கிரஸின் தீவிர விசுவாசி என்பதை நிரூபித்தார்.

பதவிக்காலம் முடிவு
கேரளாவில் இருந்து 3 ராஜ்யசபா உறுப்பினர்களாக ஏகே அந்தோனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்பிரசாத், எம்பி ஸ்ரீரேயாமஸ் குமார் ஆகியோர் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் மார்ச் 31ல் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் தனக்கு வேறு பதவி வேண்டாம் எனக்கூறி ஏகே அந்தோணி அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications