சாரதா சிட் பண்ட் பணமோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்! அமலாக்க துறை உத்தரவு
டெல்லி: சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி நிதியைப் பெற்று மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரித்து வருகிறது.
இதற்கிடையே சாரதா குழுமத்திற்கு ரூ. 42 கோடி செலவில் டிவி சேனல் வாங்கும் விவகாரத்தில் சட்ட உதவிகள் வழங்கிய விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே இப்போது இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ தேபேந்திரநாத் பிஸ்வாஸ் மற்றும் அசாம் முன்னாள் அமைச்சர் மறைந்த அஞ்சனுக்கு சொந்தமான நிறுவனம் ஆகியோரின் ரூ 6 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
"நம்பிக்கை துரோகம்.. ஏழைகள் பற்றி கவலையே இல்லை!" மத்திய பட்ஜெட்.. ப.சிதம்பரம் என்ன சொன்னார் தெரியுமா
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களுக்குச் சொந்தமான ₹ 3.3 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், ₹ 3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.