எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம்- எத்தனால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ1.69 உயர்வு- மத்திய அரசு!
டெல்லி: பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டம் முடிவு செய்துள்ளது. இதன்படி எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ்,எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் எத்தனால் விநியோகம் செய்பவர்களுக்கு விலை நிலைத்தன்மை, ஆதாயவிலை ஆகியவற்றை வழங்குவதில் அரசின் தொடர்ச்சியான கொள்கைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியை சேமிக்கவும், உகந்த சுற்றுச்சூழலுக்கும் உதவும்.கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த காலங்களைப் போலவே, சரக்கு மற்றும் சேவை வரி, போக்குவரத்து கட்டணங்கள் தனியாக செலுத்தப்படும். அதிக அடர்த்திகொண்ட சர்க்கரைப்பாகு கழிவு எத்தனால் விலையை 3% அதிகரிப்பது அதிக அளவிலான கலப்பு இலக்கை அடைய போதுமான அளவு எத்தனால் கிடைப்பதை உறுதி செய்யும்.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் எண்ணெய் நிறுவனங்கள், எத்தனால் கலப்பு பெட்ரோலை 20% வரை விற்பனை செய்கின்றன. மாற்று மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்களின்
பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.எரிசக்தி தேவைகளுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், வேளாண்துறைக்கு ஊக்கமளிக்கவும் இந்த நடவடிக்கை முயல்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் (31.12.2024 நிலவரப்படி), பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் விளைவாக சுமார் ரூ.1,13,007 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்கின்றன. சுமார் 193 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கச்சா எண்ணெய் மாற்றீடு ஏற்பட்டுள்ளது.
கனிமங்களுக்கான தேசிய இயக்கம் மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் "முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை"த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர்தொழில் நுட்பங்களுடன் கூடிய தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
கனிமவளத் துறையில் தற்சார்பு அடைவதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, 2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான தேசிய இயக்கம் அமைப்பதாக நிதியமைச்சர் 2024 ஜூலை 23 அன்று அறிவித்து இருந்தார்.
மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கம், கனிம ஆய்வு, தாதுக்களுக்கான சுரங்கம், சுத்திகரிப்பு, பதப்படுத்துதல், ஆயுட்காலம் முடிந்த பொருட்களிலிருந்து மீட்பு உள்ளிட்ட மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த இயக்கம் உள்நாட்டிலும், கடல் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள ஆதாரம் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தும். கனிமவளசுரங்கத் திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல் வழங்கும் செயல்முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். கூடுதலாக, இந்த இயக்கம் முக்கியமான கனிமவள ஆய்வுக்குத் தேவையான நிதிசார் ஊக்கத்தொகைகளை வழங்க வகை செய்கிறது.












Click it and Unblock the Notifications