காஷ்மீர் பண்டிட்டுகளை துரத்தின மாதிரி.. மணிப்பூரில் இனச்சுத்திகரிப்பு.. கதறும் மைத்தேயிகள்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதைப் போல மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் துரத்தியடிக்கப்படுவதாக அச்சமூகத் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் நாகா, குக்கிகள் பழங்குடி இனப் பட்டியலில் உள்ளனர். தங்களையும் எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது மைத்தேயி இனக்குழுவின் கோரிக்கை. இதற்கு நாகா, குக்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மைத்தேயி இன மக்களையும் எஸ்டி பட்டியலில் சேர்த்தால் தங்களுக்கான தனித்த உரிமைகள் அனைத்தும் பறிபோகும்; மைத்தேயி இன மக்கள் வழியாக கார்ப்பரேட்டுகள் மணிப்பூர் வனத்தை கொள்ளையடிப்பர் என்பவை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டு வருகிறது.
நீறுபூத்த நெருப்பாய் இந்த விவகாரம் இருந்த நிலையில் மணிப்பூர் உயர்நீதிமன்றமானது, மைத்தேயி மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்கலாம் என்ற அடிப்படையில் ஒரு உத்தரவை வெளியிட்டது. அவ்வளவுதான் ஒட்டுமொத்த குக்கி, நாகா இனமக்கள் கொந்தளித்துவிட்டனர். மைத்தேயி இனமக்கள் வாழ்விடங்கள் தேடித் தேடி தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் சொந்த நிலத்தில் மைத்தேயி இனமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். பற்றி எரிந்த மணிப்பூர் வன்முறையில் 60பேர் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு, நிலம் இழந்து முகாம்களில் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உலக மைத்தேயி கவுன்சில் நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் தலைவர் Nabashyam Heigrujam செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. மணிப்பூர் வன்முறைகள் அனைத்தும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவைதான். இப்படி ஏதாவது கொடூர வன்முறைகள் அரங்கேறும் என ஏற்கனவே மணிப்பூர் அரசை தொடர்ந்து எச்சரித்து வந்தோம். இப்போது அதே போல் நடந்துவிட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள் எப்படி அந்த நிலத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார்களோ அதேபோல மணிப்பூரில் இருந்து மைத்தேயி இனக்குழுவினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எங்களது சொந்த மாநிலத்தில் நாங்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டிருக்கிறோம்.
மணிப்பூர் நிலத்தின் பூர்வகுடிகள் மைத்தேயி, நாகா இனக்குழுவினர்தான். எங்கள் கருத்துகளை உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்க விரும்புகிறோம். ஆகக் குறைந்தது 5 நிமிடங்கள் மட்டுமே எங்களுக்கு ஒதுக்கினால் கூட எங்களது கோரிக்கை மனுவை நாங்கள் அவரிடம் தந்துவிடுவோம்.
மணிப்பூர் மக்கள் தொகையில் மைத்தேயி மக்கள் 53% உள்ளனர். ஆனால் நாகா, குக்கி இனமக்கள் மலைகளில் மட்டும் 40% பேர் உள்ளனர். மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு- என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் உண்மை வெளிவரும். அப்போதுதான் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படக் கூடிய நிலைமை உருவாகும். இவ்வாறு Nabashyam Heigrujam தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications