நீட் விவகாரம்.. யாராவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் பதில் சொல்ல வேண்டும்! சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: இந்தாண்டு நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் நீட் விவகாரத்தில் 0.001% யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், நீட் நடத்தும் தேசிய தேர்வு முகமை குறித்து சில காட்டமான விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் நீட்டிற்கு எதிராக இருந்தாலும் கூட நீட் மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடைபெறுகிறது.

நீட்: அதன்படி இந்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. இருப்பினும், இந்தாண்டு நீட் தேர்வு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் கசிந்ததாகத் தகவல்கள் வெளியானது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான போதும் அது விவாதத்தைக் கிளப்பியது. ஏனென்றால் கடந்தாண்டு வெறும் 2 பேர் மட்டுமே 720க்கு 720 மார்க் பெற்ற நிலையில், இந்தாண்டு 67 மாணவர்கள் பெற்றதும் சர்ச்சை கிளப்பியது. இது தொடர்பாகப் பலரும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்த நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை குறித்து உச்ச நீதிமன்றம் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் யாராவது 0.001% அலட்சியம் இருந்தாலும் கூட அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளது..
சுப்ரீம் கோர்ட்: தேசிய தேர்வு முகமை சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தேர்வு எழுதிய அனைவரும் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நீதிபதி விக்ரம் நாத் மற்றும் நீதிபதி எஸ்.வி.என்.பாட்டி அடங்கிய அமர்வு கூறுகையில், "தேர்வை நடத்தும் அமைப்பு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால்.. ஆம் தவறு நடந்துள்ளது என்று ஒத்துக் கொள்ள வேண்டும். என்ன தவறு என்பதைக் கூறி அதற்கு எடுக்கும் நடவடிக்கையை விளக்க வேண்டும். அதுதான் உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.
காட்டமான கருத்து: நாட்டின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் எந்தளவுக்குத் தயாராகிறார்கள் என்பதைத் தேர்வு நடந்தும் அமைப்பு மறந்துவிடக் கூடாது. நீட் தேர்வில் மோசடி செய்த மாணவர், மருத்துவரானால் சமூகத்துக்கு அவர் எத்தகைய தீங்கை விளைவிப்பார் என்று எண்ணிப் பாருங்கள். பிள்ளைகள் நீட் தேர்வுக்காக இரவு பகல் பார்க்காமல் கடினமாகப் படிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
கருணை மார்க் விவகாரம்: முன்னதாக கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கருணை மார்க்குகளை வாபஸ் பெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தாண்டு நீட் தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு இரண்டு பதில்களில் எதை எழுதி இருந்தாலும் கருணை மார்க் வழங்க நீட் முகமை முடிவு செய்தது. மொத்தம் 1563 மாணவர்களுக்குக் கருணை மார்க் வழங்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதாலேயே கருணை மார்க்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது..
அதாவது அந்த 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு அசல் மார்க்குகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும். அதேநேரம் இந்த 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தவும் தயாராக இருப்பதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. புதிய மார்க் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாமா அல்லது மறுதேர்வு எழுதலாமா என்பதை மாணவர்களே முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டது..












Click it and Unblock the Notifications