ஆர்டர் கொடுத்தா ஒரே இரவில் இங்கேயே 100 கோடி தேசியக்கொடி வாங்கலாம்.. ஏன் இந்த நிலை?- அப்பாவு ஆதங்கம்!
டெல்லி : இந்திய தேசியக்கொடிகளில் 'Made in China' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சீனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இரவு ஆர்டர் கொடுத்தால் காலையில் பல கோடி தேசியக்கொடிகளை கூட பெற முடியும் எனக் கூறியுள்ளார் தமிழக சபாநாயகர் அப்பாவு.
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடிகளில் 'மேட் இன் சைனா' என்ற டேக் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் தேசியக் கொடி ஏந்திப் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசியக் கொடியில் 'Made in China' டேக் - காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை!
இந்தியக் கொடியில் Made in China
கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65 ஆவது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சபாநாயகர்கள் கைகளில் ஏந்திச் சென்ற இந்திய தேசியக் கொடிகளில் 'மேட் இன் சைனா' என்ற டேக் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனம்
இந்திய தேசியக்கொடியில், 100% பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியக்கொடியை சீனாவில் தயாரித்துப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசியக்கொடியை சீனாவில் வாங்கி பயன்படுத்துவதா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சபாநாயகர் அப்பாவு
இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, "இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்துவதற்காக காமன்வெல்த் மாநாட்டில் பேரணியாக தேசியக் கொடிகளை ஏந்திச் சென்றோம். அந்த கொடிகளில் மேட் இன் சைனா என இருந்ததைக் கண்டு லோக்சபா சபாநாயகரிடம் "இந்திய கொடியை பிடிக்கிறோம், அதில் மேட் இன் சைனா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது" என்று சொன்னோம். அவர் சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான்.
ஒரே இரவில் 100 கோடி கொடிகளை தயாரிக்கலாம்
ஆனால் எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. சீனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் இருக்கிறது. இரவில் ஆர்டர் கொடுத்தால் காலையில் 100 கோடி கொடிகளை கூட தயாரித்துக் கொடுக்க முடியும். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறவில்லை
மேலும் பேசியுள்ள சபாநாயகர் அப்பாவு, "வெளிநாடுகளில் இருந்து தேசியக்கொடியை இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. சட்டத்தை மீறி இறக்குமதி செய்யவில்லை. மத்திய அரசின் அனுமதியோடு தான் இது நடந்திருக்கிறது. காமன்வெல்த் மாநாடு போன்ற இடங்களில், இந்திய தேசியக்கொடியில் இப்படி இடம்பெறுவது சரிதானா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.