கொரோனா: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காதது ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
டெல்லி: கொரோனாவால் உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அல்லது இழப்பீட்டு தொகை வழங்குவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு இவர்களுக்கு இவ்வளவு நாள் நிவாரணம் வழங்காமல் இருந்தது ஏன் என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக 3,98,538 பேர் இறந்துள்ளனர். இது நாளைக்குள் 4 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
குமார் பன்சால், ரீபக் கன்சல் என்ற இருவர் தொடுத்த பொது வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்ஆர் ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தது.

பத்திரம்
இந்த பத்திரத்தில் கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுக்க முடியாது. அவ்வளவு நிதிதருவது மத்திய அரசால் இயலாத காரியம். இந்த நிவாரணம் கட்டாயம் கிடையாது. அதேபோல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இவ்வளவு நிதி கொடுத்தால் கொரோனா தடுப்பு பணிகளை சரிவர செய்ய முடியாது.

உத்தரவு
மேலும் பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே கொரோனாவில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி தரப்படுகிறது என்று மத்திய அரசு குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்ஆர் ஷா ஆகியோர், கொரோனாவால் உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி அல்லது இழப்பீட்டு தொகை வழங்குவது கட்டாயம்.

உத்தரவு
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின் கீழ், பேரிடரில் இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது என்பது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் நிவாரணம் கொடுக்க வேண்டும். இந்த கட்டாயமான விதியை பின்பற்றாமல் பேரிடர் மேலாண்மை தவறி உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு கொடுப்பது உங்கள் கடமை. அதில் இருந்து நீங்கள் தவற கூடாது.

அறிக்கை
இது தொடர்பான திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும். எவ்வளவு பணம் கொடுக்க முடியும், எப்படி கொடுக்க முடியும் என்பது குறித்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் இது தொடர்பான திட்டத்தை வகுத்து நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வளவு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது.

இழப்பீடு
இதை பேரிடர் மேலாண்மை ஆணையம் தங்களிடம் இருக்கும் ஆற்றல் நிதியை வைத்து முடிவு செய்ய வேண்டும். இழப்பீடு தொகை ஏற்க கூடியதாக இருக்க வேண்டும். கொரோனாவால் பலியானவர்கள் எல்லோருக்கும் முறையான இறப்பு சான்றிதழ், தேதி மற்றும் காரணத்தோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் தர வேண்டும்.












Click it and Unblock the Notifications