தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறை
டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர் கைது செய்யப்படமாட்டார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்டது. அதில் 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன. இதனால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இந்த நிலையில் அசாம் அரசோ, விடுபட்ட 19 லட்சம் பேரும் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க 120 நாட்களுக்குள் முறையிடலாம் என்றும் உண்மையான குடிமக்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
எனினும் 19 லட்சம் பேரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இது தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான சில தவறான தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் கூறுகையில் பதிவேட்டில் இடம் பெறாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். அவர்கள் ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
அசாம் மாநிலத்தில் 200 சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து தங்கள் பெயர்களை பதிவேட்டில் சேர்த்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications