சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம்.. ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய பேஸ்புக்!
டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் இருந்த ராகுல் காந்தியின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி பூசாரி மற்றும் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு நீதி வேண்டும் என பலர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

ராகுல் காந்தி சந்திப்பு
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடன் இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் ராகுல் காந்தி.போஸ்கோ சட்டத்தின்படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுவர்-சிறுமிகளின் புகைப்படங்களையோ அல்லது அவர்களது உறவினர்களின் புகைப்படங்களையோ செய்தி ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ பதிவிடக் கூடாது.

கண்டனங்கள்
ராகுல் காந்தியின் இந்த பதிவிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக NCPCR எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து அந்த பதிவை உடனடியாக நீக்குமாறு ராகுல் காந்திக்கு பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸ்
NCPCR இன் ஆகஸ்ட் 10, 2021 அறிவிப்பின்படி, உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் நீங்கள் பதிவேற்றிய இடுகை, சிறார் நீதிச் சட்டம், 2015 ன் பிரிவு 74 -ன் கீழ் சட்டவிரோதமானது; போக்சோ, 2012 பிரிவு 23; மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 288A. என்சிபிசிஆரின் அறிவிப்பிற்கு இணங்க, இந்த இடுகையை விரைவாக நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள், "என்று பேஸ்புக் ராகுல் காந்திக்கு மின்னஞ்சலில் கூறி இருந்தது.

பதிவு நீக்கம்
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் இருந்தும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் NCPCR ட்விட்டர் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மிகவும் பாரபட்சமான முறையில் ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கைகளை எடுப்பதாக காங்கிரஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications