டெல்லி அனுமன் ஜெயந்தி வன்முறை! துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது மைனர் சிறுவனா? வெளியான பரபர தகவல்
டெல்லி: நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பலரை போலீசார் கைது செய்துள்ளது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி டெல்லி ஜஹாங்கிர் பூரி பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென வன்முறை ஏற்பட்டது. இந்த திடீர் வன்முறையால் அப்பகுதி முழுக்க போர்க் களம் போலக் காட்சி அளித்தது.

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்
இந்த வன்முறைச் சம்பவத்தில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பலரும் காயமடைந்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதைத் தடுக்க டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாரை நோக்கி வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். மேலும், போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் டெல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மெடலால் மீனா காயமடைந்தார். ஒட்டுமொத்தமாக இந்த வன்முறையில் 8 போலீசார் மற்றும் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர்
இந்தச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மெடலால் மீனா கூறுகையில், "முதலில் வாக்குவாதமாகவே இது தொடங்கியது. உடனடியாக நான் அங்குச் சென்றேன். அப்போது அது சண்டையாக மாறி, மசூதியின் முன் கல் வீச்சு சம்பவம் ஆரம்பித்தது. அப்போது அவர்களைப் பிரித்து விட்டோம். இருப்பினும், வன்முறையாளர்கள் அங்கிருந்து செல்வது போலச் சென்று கூடுதல் ஆட்களுடன் பயங்கர ஆயுதங்கள் உடன் வந்து கற்களை வீசத் தொடங்கினர்.

14 பேர் கைது
அங்குப் பெண்களும் குழந்தைகளும் கூட இருந்தனர். இருப்பினும், வன்முறை தொடர்ந்தது. அப்போது தான் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. அதில் தான் என் கையில் அடிபட்டது. இருப்பினும், யார் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்பதைப் பார்க்க முடியவில்லை" என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை 14 போரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

மைனர்
குறிப்பாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் பிறப்புச் சான்றிதழைக் காட்டிய அவரது குடும்பத்தினர், அவர் 2005இல் பிறந்தவர் என்றும் எனவே அவர் மைனர் என்றும் குடும்பத்தினர் கூறினர். இருப்பினும், இதை மறுத்துள்ள டெல்லி போலீசார், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 22 வயது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் என்றும் கடந்த 2020இல் மற்றொரு வழக்கிலும் கூட அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு
மொத்தம் 6 முதல் 7 ரவுண்டுகள் சுடப்பட்டுள்ளது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமான் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடமேற்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) உஷா ரங்னானி மற்றும் அமான் கமிட்டி உறுப்பினர்கள் மகேந்தர் பார்க், ஜஹாங்கிர்புரி மற்றும் ஆதர்ஷ் நகர் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

பாஜக கவுன்சிலர்
கூட்டத்தில் பேசிய பாஜக கவுன்சிலர் கரிமா குப்தா, "இதை நான் பகிரங்கமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ்கிறோம். நான் நேரடியாக விஷத்திற்கு வந்து விடுகிறேன். இங்கே வசிக்கும் வங்கதேச முஸ்லிம்களால் தான் எங்களுக்குப் பிரச்சினை" என்றார்.












Click it and Unblock the Notifications