நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு... புயலைக் கிளப்பி வரும்... வேளாண் மசோதா சாதக பாதகங்கள்!!
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ராஜ்ய சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றும்போது அமளி துமளி நடந்தது. சபை விதிகள் அடங்கிய பேப்பரை கிழித்து எறிந்தனர். வேளாண் மசோதா நகலையும் கிழித்து எறிந்தனர்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இவ்வளவு எதிர்ப்பை கிளப்பி இருக்கும் இந்த மசோதாவால் என்ன சாதக, பாதகங்கள் என்று பார்ப்போம்.
வேளாண் மசோதாவால் என்ன பயன்கள்:
- விவசாயம் மற்றும் நாட்டின் எதிர்ப்பார்ப்பை வேளாண் மசோதாக்கள் பூர்த்தி செய்யும் என்று விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்
- விவசாயி நல்ல பயிர்களுக்கு ஈர்க்கப்படுவார். மேலும் விவசாயி விலையுயர்ந்த பயிர்களை வளர்த்தால் அவரது வருமானம் இயற்கையாகவே அதிகரிக்கும், விவசாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்.
- விவசாய ஏற்றுமதி அதிகரிக்கும். சிறு விவசாயிகள் 86 சதவீதம் உள்ளனர். ஏற்றுமதி விவசாயத்தில் விளைபொருட்களின் நிலையான விலையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுகிறது. இதனால், அதுசார்ந்த விளை பொருட்களை விவசாயம் செய்து லாபம் அடையலாம்.
- இந்த மசோதாக்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதிக்கப்படாது, இது விவசாயிகளை மேலும் முன்னேற்ற உதவும். எதிர்காலத்திலும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்.
- இந்த மாற்றங்கள் மூலம், விவசாயிகளுக்கு நேரடியாக பெரிய வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் தொடர்பு ஏற்படும். விவசாயத்திற்கு நன்மை பயக்கும். இந்த மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் புரட்சிகர முன்னேற்றங்களைக் கொண்டு வரும்.
- இந்த மசோதா மூலம், தேசிய கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வேளாண் வணிக ஒப்பந்தங்கள், விவசாய வணிக நிறுவனங்கள், செயலிகள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அல்லது பெரிய சில்லறை விற்பனையாளர்களுடன் இணைப்பு ஏற்படும்.
- விவசாயத்திற்கு இந்த மசோதா சுதந்திரம் அளிக்கும்
- இந்த மசோதா மாநிலங்களின் விவசாய தயாரிப்பு சந்தை கமிட்டியை எந்த வகையிலும் பாதிக்காது. மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகம் தொடரும். மேலும் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் தங்கள் வயல், வீடு மற்றும் பிற இடங்களிலிருந்து தங்கள் பொருட்களை விற்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுமாறுகிறதா அதிமுக.. திமுக மீது முதல்வர் ஆவேசம்.. ராஜ்யசபாவில் மத்திய அரசு மீது பாய்ச்சல்.. ஏன்?
சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கார்பரேட்களின் கைக்கு விவசாய கொள்முதல் செல்லும். இதனால் சிறு விவசாயிகள் நசுக்கப்படுவார்கள், விவசாயத்தில் மறைமுகமாக ஈடுபட்டு இருப்பவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும். விவசாய ஏஜென்ட்கள், மண்டி நடத்துபவர்கள் ஆகியோர் பாதிக்கப்படுவார்கள். பெரிய வர்த்தகர்களின் விலை நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள். குறைந்தபட்ச விலை கிடைக்காமல் போகலாம் ஆகியவை இந்த மசோதாவால் பாதகமாக கூறப்படுகின்றன.