நாடாளுமன்றம் நோக்கி பேரணி.. டெல்லியை மீண்டும் அதிர வைக்க விவசாயிகள் திட்டம்.. பரபர தகவல்!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 8 மாதங்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீண்டகால போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.
5 மாநில தேர்தல்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி
இதனால் நாளை தலைநகர் டெல்லிக்கு சென்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்த பேரணிக்கு விவசாய சங்க தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்து நாடாளுமன்ற வளாகத்தின் அருகே கூடிவருவதற்கு போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
தினமும் 200 விவசாயிகள்
மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை ஒவ்வொரு நாளும் 200 விவசாயிகள் ஜந்தர் மந்தரை அடைந்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்துவார்கள் என்று விவசாயிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் கடந்த குடியரசு தினத்தில் நிகழ்ந்த பெரும் வன்முறை தற்போதும் நடந்து விடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக இருக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பு
இதனால் சிங்கு எல்லையில் 2,500 டெல்லி போலீசார், 3,000 துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கலவர தடுப்பு போலீசாரும் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். இதேபோல் தண்ணீரை பீய்ச்சி வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாயிகளின் போராட்டம் மிக அமைதியான முறையில் நடைபெறும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.