மீண்டும் போராட்டம்? டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்.. போலீஸ் குவிப்பு.. போக்குவரத்து நெரிசல்
டெல்லி: வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் டெல்லிக்கு பல மாநிலங்களிலிருந்து வந்துகொண்டிருப்பதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ள சம்யுக் கிஸான் மோர்ச்சா எனும் அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஏற்கெனவே புதிய வேளாண் சட்டங்கள் இந்த அமைப்பின் போராட்டத்தின் காரணமாகவே திரும்பப் பெறப்பட்டது.
உச்சக்கட்ட பரபரப்பில் டெல்லி.. அலை அலையாய் வரும் விவசாயிகள்! இன்று முதல் போராட்டம் -கடும் பாதுகாப்பு
விவசாயிகள் வருகை
பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த் கிஸான் மோர்ச்சா எனும் அமைப்பு டெல்லியில் தற்போது மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமான விவசாயிகள் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் என டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து புறப்பட்டு டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து சேர்ந்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக டெல்லியின் எல்லை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் போன்ற இடங்களில், நெரிசல் அதிகமாக இருப்பதால், பயணிகள் திரும்பிச் செல்லுமாறு அல்லது மாற்று வழிகளில் செல்லுமாறு காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதறக்காக சுமார் 5,000 விவசாயிகள் அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று பாதைகள்
டெல்லியின் எல்லை பகுதியான கர்னால் புறவழிச்சாலை, நரேலா பார்டர், பாலம் (palam) மேம்பாலம் மற்றும் அரபிந்தோ மார்க் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை சோதிக்க கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். NH-24, மீரட் விரைவுச்சாலை, கிழக்கு பெரிபெரி சாலை, முனிர்கா சாலை, NH-44 மற்றும் காசியாபாத்-வஜிராபாத் சாலை உள்ளிட்டவற்றில் வாகனங்கள் நெரிசல் காரணமாக அணிவகுத்து நின்றுள்ளன.
சோதனை
இந்த நெரிசலை குறைக்க கர்னால் மற்றும் NH-44 உள்ளிட்ட சாலைகளில் மாற்றுப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியை பொறுத்த அளவில், டால்ஸ்டாய் மார்க், சன்சாத் மார்க், ஜன்பத், அசோகா சாலை மற்றும் பண்டிட் பந்த் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது 25க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதில் சிங்கு, திக்ரி மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் ஆயுதப்படை வீரர்கள் அதிக அளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று போராட்டம் தொடங்கும் நிலையில், நேற்று விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாய்த் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.