முடிவுக்கு வருகிறதா டெல்லி விவசாயிகள் போராட்டம்? இன்று வெளியாகிறது அறிவிப்பு?
டெல்லி: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதை அடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டாலும் 6 முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பி உள்ளது.
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் முக்கிய முடிவுகள் எடுப்பார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 சட்டங்களும் வாபஸ்
டெல்லியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் எந்த பேச்சுவார்த்தைக்கு செவி சாய்க்காத விவசாயிகள், தங்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனாலும் சட்டங்கள் ரத்து செய்தாலும் நாடாளுமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

தொடரும் போராட்டம்
ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் வாபஸ் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்போது போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவேண்டும் என பிரதமருக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதினர்.

வாபஸ் பெற திட்டம்
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளிடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது. தங்களுடைய மற்ற கோரிக்கைகளை விவசாயிகள் விளக்க ஐந்து பேர் கொண்ட குழுவினை எஸ்.கே.எம். அமைத்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சு
இதுகுறித்து சம்யுக்த் கிஸான் மோர்ச்சா அமைப்பு இன்று அரசாங்கத்துடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்படும் என தெரிகிறது. விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க தயாராக உள்ள மத்திய அரசு அதற்காக ஐவர் கொண்ட ஒரு குழு அமைக்க முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பு. அதேபோல் "மின்சார திருத்த மசோதா" வரைவை திரும்பப் பெற வேண்டும், காசு மாசு ஏற்படுத்தியதாக விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்படும் என தெரிகிறது. லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தும் விவசாயிகள் போராட்டத்தின் போது இறந்த 700 விவசாயிகளுக்கு சிங்குவில் தியாகிகள் நினைவிடம் கட்ட நிலம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications