ஆக்ஷன்.. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - பாஜக எம்பி மீது எகிறும் விவசாயிகள்! இன்று மகா பஞ்சாயத்து
டெல்லி: பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கைகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இன்று விவசாயிகள் சங்கத்தினர் முசாபர்நகரில் மகா பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் பிரிஜ்பூஷன் சரண் சிங். உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் இடைக்காலமாக நிறுத்தினர்.. ஆனால் அந்த குழு முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் மற்றும் சர்வதேச மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் தலைமையில் கடந்த ஞாயிறு அன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அதை நோக்கி இந்த மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தங்கி இருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டு அங்கு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்காக வென்ற ஒலிம்பிக் உள்ளிட்ட பதக்கங்களை ஹரிதுவாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் அறிவித்தனர்.
வீட்டில் இருந்த விருதுகளையும் பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு ஹரித்வாருக்கு சென்ற வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விருதுகளை வீச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். சில நாட்கள் தங்களுக்கு அவகாசம் வழங்கினால் பிரச்சனையை தீர்க்க உதவுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்ததை ஏற்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் டெல்லி எல்லைகளை ஜூன் 5 ஆம் தேதி அடைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாய சங்கம் அறிவித்து உள்ளது. 5 நாட்களுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மத்திய அரசு தரப்பில் சந்தித்து பேச வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லிக்கு பால், காய்கறிகள் எதுவும் நுழையாத வகையில் டெல்லியின் எல்லைகளை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முசாபர்நகரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினர் மகா பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள். இதில் உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லியில் செயல்பட்டு வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications