'டீ' தயாரிக்கும் போது 'தீ'.. தொடரும் 'மர்மம்' - இன்னமும் மனம் 'தளராத' விவசாயிகள் போராட்டம்!
டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் உள்ள கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கி போராடி வருகின்றனர்.
சுமார் 12 பேர்
இந்நிலையில், சிங்கு எல்லையில் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரம் ஒன்றில் காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது அங்கே சுமார் 12 பேர் இருந்தனர் என்றும் அவர்கள் தீயை அணைக்க போராடினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் எரிந்து
எனினும், அவர்களால் முடியாததால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூடாரம் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் 5 செல்போன்கள், 20 நாற்காலிகள், 20 மெத்தைகள் மற்றும் உணவு பொருட்களும் எரிந்து நாசமாகின.
ராஜ்வந்த் சிங்
மேலும் தீயை அணைக்க போராடியதில் விவசாயி ஒருவரும் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் ராஜ்வந்த் சிங் என்ற நபர் காயமடைந்துள்ளதாக போராட்டத்தில் பங்கேற்றுள்ள பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் வசிக்கும் தில்பிரீத் சிங் என்பவர் கூறியுள்ளார்.
புதிய கூடாரம்
இதுகுறித்து அவர், "நாங்கள் தேநீர் தயாரிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் போது ராஜ்வந்த் காயமடைந்தார். அப்போது கூடாரத்தில் 12 முதல் 13 பேர் இருந்தனர். நாளை எங்கள் புதிய கூடாரத்தை விரைவில் உருவாக்குவோம்" என்றும் கூறினார்.
மர்மமான முறையில்
எனினும், இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் சிலர் மர்மமான முறையில் இறந்து வரும் சூழலில், இந்த தீவிபத்திற்கு பின்னர் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.