5 மாநில சட்டசபை தேர்தல்கள்.. ஓமிக்ரானிலிருந்து தப்பிக்க அரசியல் கட்சிகள் "செம ஐடியா!"
டெல்லி: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓமிக்ரான் அச்சுறுத்தலுக்கு நடுவே 5 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால் அரசியல் கட்சிகள் ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.
தற்போது நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநில தேர்தல்கள் தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 5 மாநில தேர்தல்களை ஒத்திவைப்பது பரிசீலிக்கலாம் என அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கட்டுப்பாடுகளும் பிரசாரமும்
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டும் வருகின்றன. அதேநேரத்தில் பகல் நேரங்களில் தீவிர தேர்தல் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய தேர்தல் பிரசாரங்கள் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. ஓமிக்ரான் அச்சுறுத்தலுக்கு நடுவே 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டால் இயல்பாகவே அரசியல் கட்சிகள் ஆன்லைன் பிரசாரம் பக்கம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

பாஜக ரெடி
இது தொடர்பாக உ.பி. அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான மோக்சின் ரசா கூறுகையில், பஞ்சாயத்து தேர்தலின் போது ஆன்லைன் பிரசாரங்களைத்தான் செய்தோம். தேர்தல் ஆணையம் எந்த கட்டுப்பாட்டை விதித்தாலும் அதை பின்பற்ற பாஜக தயாராகவே இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உ.பி. அரசும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்கிறார்.

அகிலேஷ் கட்சி சாடல்
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் அபிஷேக் மிஸ்ரா, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உ.பி. அரசு தோல்வியை தழுவிவிட்டது. ஓமிக்ரான் அச்சுறுத்தலுக்கு நடுவே தேர்தல் நடத்தப்பட்டால் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்ய தயாராகவே இருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல்களை எப்படி நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என்கிறது காங்கிரஸ்.

ஆன்லைன் பிரசாரம் கை கொடுக்காது
ஆனால் சமூக வலைதளங்கள், ஆன்லைன் மூலமான பிரசாரங்கள் மக்களை சென்றடையாது; கிராமப் புறங்களில் மக்கள் சாதாரணமாகவே இணைய சேவைகளைப் பெறுவது பெரும் போராட்டமாகவே இருக்கிறது. சிக்னல் கிடைக்காத கிராமங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் ஆன்லைன் பிரசாரங்கள் பெரிய அளவு ஒர்க் அவுட் ஆகாது. அதிகபட்சமாக டிவியில்தான் பிரசாரம் செய்ய முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications