பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, 370-வது பிரிவு, ஒரு பாலின திருமணம்.. 5 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் -2023!
டெல்லி: பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, 370-வது பிரிவு, ஒரு பாலின திருமணம், ஆளுநர்கள் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் 2023-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்புகளை வழங்கியது.
2023-ல் உச்சநீதிமன்றம் அளித்த சில தீர்ப்புகள்- பணமதிப்பிழப்பு: 2016-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்கிற அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. கறுப்பு பணம் ஒழிப்பு, ஊழலை கட்டுப்படுத்துதல், கள்ள நோட்டுகள் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கான நிதி முடக்கம் ஆகிய நல்ல நோக்கங்களுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் 5 பேர் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது.

ஜல்லிக்கட்டு: தமிழ்நாட்டு வரலாற்றில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த ஜல்லிக்கட்டு புரட்சி சரித்திரத்தில் இடம் பெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அவசர சட்ட திருத்தம் செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
ஒரே பாலின திருமணம்: ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் 21 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுத்தது. அத்துடன் இது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
370-வது பிரிவு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு 2019-ல் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது என்றுதான் அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 370-வது பிரிவை ரத்து செய்தது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் செல்லும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
டெல்லி அரசு- ஆளுநர் வழக்கு: டெல்லி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் இருக்கிறது என்பது ஆம் ஆத்மி அரசு வாதம். இதனை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி யூனியன் பிரதேச நிர்வாக முடிவுகளை எடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உண்டு; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆளுநர்கள் தொடர்பான பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா வழக்குகளில் மாநிலங்களின் ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போடும் உத்தரவுகளையும் பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications