மோடி பற்றி கட்டுரையை பகிர்ந்தால் -நீதிபதி ஆக முடியாதா? மத்திய அரசுக்கு கொலிஜியம் வெளிப்படையான பதிலடி
டெல்லி: மத்திய அரசுக்கும் - கொலிஜியத்திற்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், 3 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு கொல்ஜியமும் பதிலடி கொடுத்துள்ளது. பொதுவாக நீதிபதிகளை மத்திய அரசு ஏற்காத பட்சத்தில் அதற்கான காரணத்தை மத்திய அரசோ, கொலிஜியமோ பொதுவில் தெரிவிக்காது. ஆனால் இந்த முறை மத்திய அரசு சொன்ன காரணங்களை கொலிஜியம்.. முதல்முறையாக பொதுவில் போட்டு உடைத்து உள்ளது.
இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது. இந்த கொலிஜியம் செயல்படும் முறை என்பதில் நிறைய புதிர்கள் உள்ளன என்று பாஜக விமர்சனம் செய்து வருகிறது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் பரிந்துரைகளை செய்யும்.
பல வரையறைகளை வைத்து நீதிபதிகளை இந்த கொலிஜியம் தேர்வு செய்யும். இந்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் மத்திய அரசின் வேலை. கொலிஜியம் செய்யும் பரிந்துரையை மத்திய அரசு எதிர்ப்பு இல்லாமல் ஏற்க வேண்டும்.
மாலேகான் குண்டுவெடிப்பு:மாஜி ராணுவ அதிகாரி வக்கீல் நீலா கோகலே நீதிபதியாக நியமனம்-கொலிஜியம் பரிந்துரை
பரிந்துரை
அதாவது கொலிஜியம் என்ன சொல்கிறதோ அதற்கு எதிர்ப்பு எல்லாம் சொல்லாமல் மத்திய அரசு பரிந்துரையை ஏற்க வேண்டும். ஆனால் சமயங்களில் கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காமல் மீண்டும் பரிசீலனை செய்ய திருப்பி அனுப்பிய சம்பவங்கள் நடந்து உள்ளன. உதாரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப்பை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. ஆனாலும் கொலிஜியம் தொடர்ந்து பரிந்துரை செய்ததால் வேறு வழியின்றி மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் கே. எம் ஜோசப் நியமனம் என்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நியமனம் ஆகும்.
நியமனம்
மத்திய அரசுக்கும் - கொலிஜியத்திற்கும் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தற்போது தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கேஎம் ஜோசப், எம்ஆர் ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் கடந்த பிப்ரவரி 16, 2022 புதிய நீதிபதிகளுக்கான பரிந்துரைகளை மேற்கொண்டனர். அதில் வழக்கறிஞர் ஆர் ஜான் சாத்தியனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை மேற்கொண்டனர். இவரின் நியமனம் உட்பட மொத்தம் 5 நீதிபதிகளின் நியமனத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு இதற்காக அனுப்பிய கடிதத்திற்கு தற்போது கொலிஜியம் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம்
இதில், வழக்கறிஞர் சோரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு, அவர் தன்பாலின உறவுக்காரர். அவர் நடுநிலையாக இல்லாமல் போக வாய்ப்புள்ளது. அதோடு அவரின் இணையர் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவர் என்ற பதிலை அளித்துள்ளது. இந்த பதிலை பொதுவில் பகிர்ந்துள்ள கொலிஜியம், அதற்கு அளித்த பதிலில், நமது அரசியலமைப்பு சட்டத்தில் பாலியல் தேர்வுக்கும், பாலின சமத்துவத்துக்கும் இடம் உள்ளது. கிர்பால் நியமனம் டெல்லி ஹைகோர்ட்டில் பன்முகத்தன்மையை ஏற்படுத்தும். வெளிநாட்டை சேர்ந்த இணையர் இருப்பதால் ஒருவரின் நீதிபதி நியமனத்தை எதிர்க்க முடியாது, என்று கொலிஜியம் பதிலில் கூறி உள்ளது.
மும்பை உயர் நீதிமன்றம்
அதேபோல் வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு எதிர்த்து உள்ளது. இதற்கு மத்திய அரசு, சுந்தரேசன் சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்துக்களை சொல்லி இருக்கிறார். அவர் பெண்டிங் இருக்கும் வழக்குகள் பற்றி பேசி இருக்கிறார். அதனால் அவரை நியமிக்க கூடாது, என்று பதில் அளித்துள்ளது. இந்த பதிலை பொதுவில் பகிர்ந்துள்ள கொலிஜியம், அதற்கு அளித்த பதிலில், ஒருவர் தனது தனிப்பட்ட கருத்தை சொல்வதால் அவரை நீதிபதியாக நியமிக்க முடியாது என்ற விதி இல்லை, என்று கொலிஜியம் பதிலில் கூறி உள்ளது.
ஜான் சத்தியன்
இன்னொரு பக்கம் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியனை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு அளித்த பதிலில், சத்யன் பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் கட்டுரையை பகிர்ந்து உள்ளார். அதேபோல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவி ஒருவரின் (அனிதா தற்கொலை - 2017) தற்கொலை பற்றியும் இவர் கட்டுரையை பகிர்ந்து, அதனால் அவரை நியமிக்க கூடாது, என்று பதில் அளித்துள்ளது. இந்த பதிலை பொதுவில் பகிர்ந்துள்ள கொலிஜியம், அதற்கு அளித்த பதிலில், மோடியை பற்றி, சமூக விஷய ங்களை பற்றி ஒருவர் கட்டுரையை பகிர்வதால், அவரின் தேர்வு முறையை எதிர்க்க முடியாது. அது தவறு, என்று கொலிஜியம் பதிலில் கூறி உள்ளது.
பதிலடி
அதேபோல் வழக்கறிஞர்கள் அமிதேஷ் பனர்ஜீ, சாக்கியா சென் ஆகியோர் நீதிபதிகளாக்கவும் மத்திய அரசு எதிர்த்து உள்ளது. இதையும் கொலிஜியம் வெளிப்படையாக எதிர்த்து உள்ளது. பொதுவாக நீதிபதிகளை மத்திய அரசு ஏற்காத பட்சத்தில் அதற்கான காரணத்தை மத்திய அரசோ, கொலிஜியமோ பொதுவில் தெரிவிக்காது. தங்களுக்கு உள்ளே பகிர்ந்து கொள்ளும் கடிதத்தில் மட்டுமே ரகசியமாக கருத்துக்களை வைப்பார்கள். ஆனால் இந்த முறை மத்திய அரசு சொன்ன காரணங்களை கொலிஜியம்.. முதல்முறையாக பொதுவில் போட்டு உடைத்து உள்ளது. கொலிஜியம் வெளிப்படையாக இல்லை என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில், பாருங்கள் நாங்கள் எவ்வளவு வெளிப்படை என்று கொலிஜியம் இதன் மூலம் காட்டி உள்ளதாக கருத்துக்கள் வைக்கப்படுகின்றன.
தொடர்பு எதிர்ப்பு
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து கொலிஜியம் தேர்வு முறையை எதிர்த்து வருகிறார். கொலிஜியம் தேர்வு முறை புதிராக உள்ளது. இதில் தேர்வுகள் மறைமுகமாக இல்லை. இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார். ஏற்கனவே இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதம் இது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் தற்போது இந்த நியமன விவகாரம் வெளியாகி உள்ளது.