தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் 2 குழந்தைகள் பலி.. பாகிஸ்தான் உலகை ஏமாற்றுகிறது.. விக்ரம் மிஸ்ரி!
டெல்லி: பொய்கள் மூலமாக பாகிஸ்தான் மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றம்சாட்டியுள்ளார். பூஞ்ச் பகுதியில் குருத்வாரா ஒன்றை பாகிஸ்தான் தாக்கியதாக கூறிய விக்ரம் மிஸ்ரி, அதே பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றையும் தாக்கியதாகவும், அதில் 2 குழந்தைகள் பலியானதாகவும் தெரிவித்துள்ளார். வழிபாட்டு தலங்களை தாக்கவில்லை என்று பாகிஸ்தான் உலகை ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர், பஞ்சாப், ஜம்மு, ஜெய்சல்மார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதனை இந்திய பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அறிவிக்கப்படாத போர் பதற்றம் நிலவி வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, வின் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய்.
குருத்வாராக்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திவிட்டு, பாகிஸ்தான் மீது பழிபோடுவதாக கூறுகிறார்கள். சொந்த நாட்டு மக்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற கற்பனை பாகிஸ்தானுக்கு மட்டுமே தோன்றும். அதேபோல் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. பூஞ்ச் பகுதியில் உள்ள குருத்வாரா ஒன்றில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
ஆனால் சீக்கிய வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்கியதாக பொய்த் தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. இந்த பொய்கள் மூலமாக மதவாத பிரச்சனைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ஆனால் இந்தியா ஒற்றுமையோடு பாகிஸ்தானுக்கு எதிராக நிற்கிறது. பூஞ்ச் பகுதியில் தனியார் பள்ளி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பள்ளி மூடப்பட்டிருந்ததால் மிகப்பெரிய இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல் பூஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றையும் பாகிஸ்தான் தாக்கியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பெற்றோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அளித்து உலகை ஏமாற்றுகிறது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்காவிடம் எடுத்துரைத்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications