அக்னிவேஷ் உயிரை எமன் ஏன் இவ்வளவு லேட்டா பறித்தார்.. மாஜி சிபிஐ இயக்குநர் நாகேஸ்வரராவ் ஷாக் ட்வீட்!
டெல்லி: சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் மறைவு தொடர்பாக முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வராவ் பதிவிட்ட ட்வீட் பெரும் சர்ச்சையாகி உள்ளது. பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவராகவும் ஹரியானா மாநில அமைச்சராகவும் பணியாற்றியவர் சுவாமி அக்னிவேஷ். அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார்.
மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் தூதராக பங்கேற்றார். மத்திய பாஜக அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவற்றை கடுமையாக எதிர்த்தவர் சுவாமி அக்னிவேஷ்.
உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுவாமி அக்னிவேஷ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுவாமி அக்னிவேஷ் மறைவு தொடர்பாக முன்னாள் சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வரராவ் ட்விட்டரில், அக்னிவேஷை எமதர்மராஜா இவ்வளவு லேட்டா ஏன் கொண்டு போனார்? என பதிவிட்டிருந்தார்.
அவரது முழுப் பதிவு:
நல்லவேளை ஒழிந்தார் @swamiagnivesh
காவி உடையில் இருந்த இந்து எதிரி நீங்கள்.
இந்து மதத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் நீங்கள்
தெலுங்கு பிராமணராக நீங்கள் பிறந்ததை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்
ஆடு போல மாறு வேடம் போட்ட சிங்கம் நீங்கள்
எமன் ஏன் இத்தனை காலம் தாமதித்து விட்டான் என்பே எனது குற்றச்சாட்டாகும்
இப்படி எழுதியுள்ளார் நாகேஸ்வர ராவ். அவரது இந்த பதிவுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
யார் இந்த நாகேஸ்வரராவ்?
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பதவி வகித்த போது சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுடன் மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அப்போது சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் நாகேஸ்வரராவ்.
Recommended Video
இவரது நியமனத்தை எதிர்த்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா, தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார்.