‘ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி’ ராகுலின் பக்கா பிளான்! கரையேறுமா காங்கிரஸ்? கைகொடுக்குமா திட்டங்கள்?
டெல்லி : நீங்கள் என் குடும்பம் நான் உங்களுடைய குடும்பம், நாம் அனைவருமே ஒரே குடும்பம் என நிர்வாகிகள் மத்தியில் உருக்கமாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்பு
காங்கிரஸ் ஆலோசனை
நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, "நமது எதிரிகள் நம்மை மடக்கிய இடம் தகவல் தொடர்பு. எனவே இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் இந்த விஷயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் இதனை அதிக அளவில் கைக்கொள்ள வேண்டும். நீங்கள் என் குடும்பம் நான் உங்களுடைய குடும்பம். நாம் அனைவருமே ஒரே குடும்பம்:
ராகுல் காந்தி பேச்சு
ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பிய தலைவர்கள் பாஜகவில் எந்த அளவிற்கு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். தலித் தலைவர்களாக இருக்கும் பொழுது அவர்களது கருத்துக்கள் எதையும் பாஜக தலைமை கேட்பது இல்லை என கூறினார்கள்.
குடும்பத்திற்கு ஒரு பதவி
பிராந்தியங்களின் தொகுப்புதான் இந்தியா என அரசியல் சாசனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா எந்த ஒரு தனி நபருக்கும், தனி கட்சிக்கும் சொந்தமான நாடு கிடையாது. பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் காங்கிரஸ் கேட்கும். இதுதான் கட்சியின் டிஎன்ஏ காங்கிரஸில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்' என பேசினார்.
அரசியல் முக்கியத்துவம்
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் ராகுல் காந்தியில் இந்த பேச்சு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தலைவர் பதவியை விட கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதை ராகுலின் பேச்சு காட்டுகிறது எனவும், ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயம் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகக் கருதப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.