சுதந்திரப் போராட்டத்துக்காக மட்டுமல்ல "சமூக நீதி"க்காகவும் போராடியவர் வீர சாவர்க்கர்- பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மட்டுமல்ல சமூக நீதிக்காகவும் போராடியவர் வீர சாவர்க்கர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் வீர சாவர்க்கர் பிறந்த நாள் குறித்து பேசியதாவது: மே மாதம் 28ஆம் தேதியானது, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர் சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாளாகும். அவருடைய தியாகம், சாகஸம் மற்றும் மனவுறுதியோடு தொடர்புடைய சம்பவங்கள் இன்றும் கூட, நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன. வீர சாவர்க்கர் அவர்கள் அந்தமானிலே கொடூரங்களை அனுபவித்த சிறைச்சாலையின் அறைக்குச் சென்ற தினத்தை என்னால் இன்றும் மறக்க முடியாது. வீர சாவர்க்கரின் ஆளுமை, திடத்தன்மை மற்றும் பரந்துபட்ட மனம் ஆகியவை நிரம்பியது. அவருடைய தைரியமான, சுயமரியாதை நிரம்பிய இயல்பு, அடிமைத்தன உணர்வுக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்தது. சுதந்திரப் போராட்டம் மட்டுமல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூகநீதிக்காகவும் கூட வீர சாவர்க்கர் புரிந்த செயல்கள் இன்றும் கூட நினைவில் கொள்ளப்படுகின்றன.

தேசத்தின் ஒரு மாபெரும் மனிதரைப் பற்றி நான் இப்போது உங்களிடம் விவாதிக்க இருக்கிறேன், இவர் அரசியல் மற்றும் திரைத் துறையில் தனது அற்புதமான திறமைகளை, ஆழமான முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறார். இந்த மகத்தான மனிதரின் பெயர் தான் என். டி. ராமாராவ், இவரை நாம் அனைவரும் என் டி ஆர் என்ற பெயரிலே நன்கறிவோம். இன்று என் டி ஆர் அவர்களின் 100ஆவது பிறந்த நாளாகும். தனது பல்நோக்குத் திறமைகளின் துணையால், இவர் தெலுகு திரைப்படங்களின் நாயகனாகவும் விளங்கியதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கானோரின் இதயங்களையும் வென்றிருக்கிறார். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இவர் பல இதிகாசப் பாத்திரங்களுக்குத் தனது நடிப்புத் திறமையால், மீண்டும் உயிர்ப்பளித்திருக்கிறார். பகவான் கிருஷ்ணர், இராமர் போன்ற இன்னும் பிற பாத்திரங்களில் என் டி ஆரின் நடிப்புத் திறமையை மக்கள் எந்த அளவுக்கு விரும்பியிருக்கிறார்கள் என்றால், அவரை மக்கள் இன்றும் கூட நினைவில் வைத்திருக்கின்றார்கள். என் டி ஆர், திரையுலகோடு கூடவே அரசியலிலும் கூட தனது தனிப்பட்ட முத்திரையை ஏற்படுத்தியிருக்கிறார். இங்கேயும் கூட இவர் மக்களின் முழுமையான அன்பு மற்றும் ஆசிகளைப் பெற்றிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள இலட்சோபலட்சம் மக்களின் இதயங்களில் இன்றும் இடம் பிடித்திருக்கும் என் டி ராமராவ் அவர்களுக்கு நான் இன்று பணிவான நினைவாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications