மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை.. ஜனாதிபதி முதல் பிரதமர் வரை மலர்தூவி அஞ்சலி
டெல்லி: காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்கா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நம் நாடு அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் மகாத்மா காந்தி தான். அவரது பிறந்தநாளான அக்டோபர் 2 ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த அன்பு பாபுவின் (மகாத்கா காந்தி) வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவது தான் காந்தி ஜெயந்தி. துணிச்சலும், எளிமையும் எப்படி பெரிய மாற்றத்துக்கான கருவிகளாக மாறும் என்பதை அவர் நிரூபித்தார். சேவையின் அதிகாரம் என்பது பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை இரக்கத்துடன் வழங்குவது தான் என்று அவர் நம்பினார். அவரது பாதையில் நாமும் ‛விக்சித் பாரத்'தை நோக்கி பயணிப்போம்'' என்றார்.

அதேபோல் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பல தலைவர்கள் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தியின் சிலை மற்றும் போட்டோக்களுக்கு பலரும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications