இந்தியாவில் நடந்த சின்ன கூட்டம்.. முட்டிக்கொள்ளும் ஜெர்மனி-உக்ரைன்.. ஜெர்மன் கடற்படை தலைவர் ராஜினாமா
டெல்லி: இந்தியாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஜெர்மன் கடற்படை தலைவர் கே அச்சிம் ஸ்கோன்பாக் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையானதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா மோதல் குறித்து இவர் பேசிய விஷயங்கள்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
இவரின் பேச்சு குறித்து பார்க்கும் முன்.. ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து ஒரு சின்ன விளக்கம். சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது. முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள்.
என்ன மோதல்?
இதனால் உக்ரைன் மீது ஆயுத போர் நடத்தி அந்த நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது. இப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் உள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த இரண்டு வாரமாக ரஷ்யா படைகளை குவித்து வருகிறது.
ஏன் மோதல்?
உக்ரைன் ரஷ்யாவோடு வரலாற்று ரீதியாக தொடர்பு கொண்டது. இருப்பினும் ரஷ்யாவை உக்ரைன் விரும்புவது இல்லை. இதனால் உக்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவோடு நெருக்கமாக காட்டி வருகிறது. அதிலும் அமெரிக்கா, யு.கே இருக்க கூடிய நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயன்று வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு வைக்கப்படும் செக் மேட். இதனால் அதற்கு முன் ரஷ்யா எப்படியாவது உக்ரைனை ஆக்கிரமிக்க பார்க்கிறது.. இதுதான் சுருக்கமான வரலாறு.. சரி நிகழ் காலத்திற்கு வருவோம்.
ஜெர்மன் யார் பக்கம்?
இந்த உக்ரைன் - ரஷ்யா மோதலில் ஜெர்மனி தொடக்கத்தில் இருந்தே உக்ரைன் பக்கம். உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதை ஜெர்மனி விரும்பவில்லை. ஏனென்றால் நேட்டோ படையில் ஜெர்மனியும் ஒரு நாடு. ஜெர்மனி உக்ரைனுக்கு பல காலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகொண்டு இருக்கிறது. முக்கியமாக ரஷ்யா இத்தனை காலம் உக்ரைனை மென்று விழுங்காமல் இருக்க ஜெர்மனியும் ஒரு காரணம். இப்படி ரஷ்யாவிற்கு எதிராக இருக்கும் ஜெர்மனி போன்ற ஒரு நாட்டின் கடற்படை தலைவர் திடீரென ரஷ்யாவை ஆதரித்து பேசினால் எப்படி இருக்கும்.. அதைத்தான் ஜெர்மன் கடற்படை தலைவர் கே அச்சிம் ஸ்கோன்பாக் செய்துள்ளார்.
என்ன சொன்னார்?
இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள ஜெர்மன் கடற்படை தலைவர் கே அச்சிம் ஸ்கோன்பாக் சமீபத்தில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டம் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டதை அவர் மறந்துவிட்டு பேசினாரா அல்லது தெரிந்தே பேசினாரா என்று தெரியவில்லை.. இந்த கூட்டத்தில் முழுக்க முழுக்க ரஷ்ய அதிபர் புடினை பாராட்டி அந்த ஜெர்மனி கடற்படை தலைவர் பேசினார். கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது பேச்சில், கிரிமியாவை உக்ரைன் இனி உரிமை கொண்டாட முடியாது.
உக்ரைன்
கிரிமியா இப்போது ரஷ்யா வசம் உள்ளது. அது திரும்பி வராது. ரஷ்யா உக்ரைனில் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. ரஷ்யாவிற்கு சொல்லப்போனால் உக்ரைன் தேவை இல்லை. ரஷ்யாவிற்கு தேவை எல்லாம் மரியாதைதான். உக்ரைன் ஐரோப்பா யூனியனுடன் நட்பாவதை ரஷ்யாவும், புடினும் விரும்பவில்லை. புடினுக்கு தேவை மரியாதை. அதற்கான தகுதியும் புடினுக்கு உள்ளது. அவருக்கான மரியாதையை உலக நாடுகள் கொடுக்க வேண்டும்.
பிரஷர் புடின்
உக்ரைன் மீது புடின் பிரஷர் கொடுக்கிறார் என்றால் அதற்கான பலம் அவர்களுக்கு இருக்கிறது. அவருக்கு உண்டான மரியாதையை உலக நாடுகள் கொடுத்தால் பிரச்சனை இருக்காது. ரஷ்யா பழமையான நாடு. ரஷ்யா முக்கியமான நாடு. நாம் சீனாவை எதிர்க்க வேண்டும் என்றால் ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும். ரஷ்யாவுடன் நட்பாக இருக்க வேண்டும். இந்தியா, ஜெர்மனி போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் நட்பாக இருக்க வேண்டும். ரஷ்ய அதிபர் புடின் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம்.. ஆனால் ரஷ்யா போன்ற பெரிய நாடு நம்முடன் இருப்பதே சரியானது என்று கே அச்சிம் ஸ்கோன்பாக் குறிப்பிட்டார்.
ஜெர்மனி எதிர்ப்பு
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஜெர்மனி எதிர்க்கும் நிலையில் ஜெர்மனியின் கடற்படை தளபதி இப்படி ரஷ்யாவிற்கு ஆதரவாக பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதை ஜெர்மனி அரசு கடுமையாக எதிர்த்து உள்ளது. அதேபோல் ஐரோப்பா யூனியனில் உள்ள நாடுகளும் எதிர்த்து உள்ளது. உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுக்கான ஜெர்மனி தூதருக்கும் சம்மன் அனுப்பி.. இதுதான் உங்கள் நிலைப்பாடா? என்று விளக்கம் கேட்டுள்ளது.
சம்மன்
உங்கள் நாட்டு கடற்படை தலைவர் கே அச்சிம் ஸ்கோன்பாக் ரஷ்யாவை ஆதரிக்கிறார். இந்தியாவில் நடந்த மீட்டிங்கில் எங்களுக்கு எதிராக பேசி இருக்கிறார். இதுதான் உங்கள் நாட்டின் நிலைப்பாடா.. நாம் நட்பு நாடுகள் கிடையாதா என்ற தொணியில் கேள்வி எழுப்பி கே அச்சிம் ஸ்கோன்பாக் குறித்து விளக்கம் கேட்டு உக்ரைன் ஜெர்மனிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் நடந்த ஒரு சின்ன கூட்டம் இப்போது உக்ரைன் - ஜெர்மனி இடையில் ஒரு விரிசலையே ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ராஜினாமா
இந்த நிலையில்தான் கே அச்சிம் ஸ்கோன்பாக் தனது ஜெர்மனி கடற்படை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். என்னுடைய பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் இதில் மேற்கொண்டு கருத்து கூற விரும்பவில்லை. நான் அவசரப்பட்டு பேசிவிட்டேன். என்னுடைய கருத்துக்கள் மேலும் பிரச்னையை ஏற்படுத்தும் முன் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கே அச்சிம் ஸ்கோன்பாக் கூறி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்திய மீட்டிங்கில் தான் பேசியது லைவில் ஒளிபரப்பானது தெரியாமல் அவர் இப்படி உளறிக்கொட்டி இருக்கலாம் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.. எது எப்படியோ ஏற்கனவே புகைச்சலாக இருக்கும் உக்ரைன் - ரஷ்யா மோதலில் கே அச்சிம் ஸ்கோன்பாக் வந்து சில லிட்டர் பெட்ரோலை ஊற்றிவிட்டு சென்று இருக்கிறார்.. இனி போக போகத்தான் இது கொழுந்து விட்டு எரிய போகிறது!