மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. புதிய வருமான வரி முறையில் சின்ன திருத்தம்..25000 சேமிப்பு
டெல்லி: 7 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வெறும் ரூ.100 வருமானம் வந்தால் கூட 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்ததை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றி உள்ளார். இதனால் புதிய வருமான வரித்திட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு புதிய சலுகை கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவுடன் 64 திருத்தங்களையும் தாக்கல் செய்தார். அதில் ஒரு முக்கியமான திருத்தம் காரணமாக, வருமானவரி திட்டத்தின் புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு சலுகை கிடைக்கும்,.
புதிய வரிவிதிப்பு முறையில், ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ஆனால், கூடுதலாக ரூ.100 வருமானம் இருந்தால், அதாவது ரூ.7 லட்சத்து 100 வருமானம் வந்தால் கூட 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.100 வருமானத்துக்கு ரூ.25 ஆயிரத்து 10 ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

வருமான வரி
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்துள்ள புதிய திருத்தம் காரணமாக புதிய வரிவிதிப்பு முறையை தேர்வு செய்பவர்களுக்கு வரிச்சலுகை கிடைத்துள்ளளது. இந்த திருத்தத்தில், ரூ.7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருமானம் உள்ளவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் வகையில், ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி
பொதுவாக வருமான வரி தாக்கலின்போது, புதிய வரி கொள்கை பழைய வரி கொள்கை இவ்விரண்டில் எதை தேர்வு செய்து தாக்கல் செய்ய போகிறீர்கள்...? என்ற கேள்வி வருமான வரித்துறை இணையதளத்தில் முன்வைக்கப்படும். ஆனால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆப்ஷனை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும், புதிய வரி கொள்கை முறையே, 'டிபால்ட்' முறையில் பின்பற்றப்படும். நீங்கள்தான், உங்களுக்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதை தேர்வு செய்ய வேண்டும்.

மார்ச் 31ம் தேதி கடைசி
புதிய வருமான வரி கொள்கையின்படி, இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும். புதிய வரி கொள்கையின் படி இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரி சேமிப்பு முதலீடுகள் பொதுவாக ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்த நிதி பரிவர்த்தனைகளை கொடுத்து வருமான வரி தாக்கல் என்பதை செய்வீர்கள் ஆக அந்த வருமான வரிதாக்கலில் சில வரி சலுகைகளும் இருக்கும். குறிப்பாக செய்யும் முதலீடுகள், இன்சூரன்ஸ் பிரிமீயம், டிராவல் அலவன்ஸ் போன்ற பலவற்றிற்கும் வரி சலுகை என்பது கிடைக்கும். குறிப்பாக 80-சி பிரிவின் கீழ் வரி சலுகை என்பது கிடைக்கும். அஞ்சலகத்தின் பல திட்டங்கள், இ.எல்.எஸ்.எஸ் என பலவும் இதில் சலுகைகளை வழங்குகின்றன. ஆக இதனை பெறவேண்டுமெனில் நீங்கள் மார்ச் 31-க்குள் முதலீடு செய்திருக்க வேண்டும்.

என்னென்ன திட்டங்கள்
இந்நிலையில் எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப்&சிந்த் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளும் பல சிறப்பு வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பலவும் மார்ச் 31, 2023-ல் முடிய உள்ளன. குறிப்பாக எஸ்.பி.ஐ.-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் எப்டி திட்டம், ஹெச்.டி.எப்.சி வங்கியின் சீனியர் சிட்டிசன் கேர் எப்டி, இந்தியன் வங்கியின் இண்ட் சக்தி 555 நாள் எப்டி திட்டம், ஐ.டி.பி.ஐ. வங்கியின் நமான் சீனியர் சிட்டிசன் டெபாசிட் திட்டம், பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஸ்பெஷல் எப்டி திட்டம் என பலவும் மார்ச் 31க்குள் முடியப்போகிறது.












Click it and Unblock the Notifications