தாய்மொழி கணக்கெடுப்பு பணி தீவிரம்.. இதுவரை 576 மொழிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது - மத்திய அரசு
டெல்லி: தாய்மொழி கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ள மத்திய அரசு, இதுவரை 576 மொழிகள் கணக்கெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மொழிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகம், உத்தரபிரதேசத்தில் தாய்மொழி கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொழி அரசியல்..
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, மொழியை மையமாக வைத்து அரசியல் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியை முன்னிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. "இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி பாலமாக இருக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியது பெரும் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் வித்திட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக, டிஆர்எஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

மொழிவாரி இடஒதுக்கீடு..
இது ஒருபுறம் இருக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை போல மொழிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மொழி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அக்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கணக்கெடுப்பு தீவிரம்
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து தாய்மொழிகளையும் கணக்கெடுத்து அவற்றை ஆவணம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. கொரோனா காரணமாக இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து விட்டதால், இந்தப் பணி தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் கணக்கெடுப்பதுடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மொழி நடைகளையும் வீடியோ பதிவு செய்து அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையக் காப்பகத்தை (web archieve) அரசு உருவாக்கியுள்ளது.

576 மொழிகள் கணக்கெடுப்பு
இதுவரை 576 தாய் மொழிகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகள் முடிவடைந்திருக்கின்றன. மாநிலவாரியாக இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. தமிழகம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதேபோல, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்டங்கள், கிராமங்கள், நகரங்கள், வார்டுகள் ஆகியவற்றின் நிர்வாக வரைப்படங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications