சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியாது: தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம்!
டெல்லி: சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்மாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள், அரசு உத்தரவுகளை பரிசீலிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும்; அத்துடன் அரசு நியமித்த தேர்வுக்குழுக்களின் பரிந்துரைகளின்படி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரகளை நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தமிழ்நாடு அரசின் வழக்கை இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் ஆகியோர் முன்வைத்தனர். 2020-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்; குற்றவியல் நடவடிக்கைகளுக்குக் கூட ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக வேண்டியுள்ளது. 54 சிறை கைதிகளை விடுதலை செய்யும் கோப்புகளையும் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் காலியிடங்களை நிரப்ப முடியாமல் உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆளுநரின் இந்த செயல்பாடுகள் மக்களின் உரிமையை பறிக்கக் கூடியவை எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ள 4 வகையான குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. அரசியல் சாசாப் பிரிவு 200-ன் கீழ் சட்டசபை மசோதாக்கள் மீது ஆளுநர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்; மசோதாக்களுக்கு ஒப்புத தரவில்லை எனில் திருப்பி அனுப்பதான் வேண்டுமே தவிர நிறுத்தி வைத்து கிடப்பில் போடக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை நவம்பர் 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.












Click it and Unblock the Notifications