உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த துணை ஜனாதிபதியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு- டெல்லியில் பரபர!
டெல்லி: தமிழ்நாடு அரசின் வழக்கில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்திருந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டார். இதனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, உச்சநீதிமன்றத்துக்கு போனது.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பில் ஆளுநர்கள் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்கள்; சட்டசபை மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர காலக்கெடு நிரணயிக்கப்பட்டது. இதேபோல மாநில அரசுகளின் மசோதாக்கள் மீதான ஜனாதிபதி முடிவுக்கும் காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம். இது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்தார் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர். உச்சநீதிமன்றம், சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகிறதா? உச்சநீதிமன்றம் தமக்கான அதிகாரம் 142-வது பிரிவை அணு ஆயுத ஏவுகணையாக பயன்படுத்துகிறதா? என ஜெகதீப் தன்கர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளைச் சிதைத்து, பொதுக் கருத்தாடலில் வலதுசாரிக் கருத்துகளைத் திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது ஆளுநர்கள், குடியரசுத் துணைத் தலைவர், அவ்வளவு ஏன் மாண்புமிகு குடியரசுத் தலைவர் உட்பட அரசியலமைப்புப் பதவிகளை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.
Hon'ble Governor Thiru R. N. Ravi called on Hon'ble Vice President of India Thiru Jagdeep Dhankhar at the Vice-President's Enclave, New Delhi. pic.twitter.com/VHpE8KQcmY
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 19, 2025
மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல! எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர்பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் மாண்பமை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்ப்பு தவறான வழிமுறையைச் சரிசெய்யும் நகர்வாகும். ஆகவே, இந்த வரவேற்கத்தகுந்த சீர்திருத்த நடவடிக்கை பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்போதைய தேவை என்பது, இந்தச் சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைத்தப்படுவதை உறுதிசெய்வதே எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த பின்னணியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்தது. தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ரவி பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி வருகிறார். டெல்லியில் இன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் ஆளுநர் ரவி சந்தித்து பேசியிருந்தார்.
நாட்டின் ஆளுநர்கள் கடமைகள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படும் நிலையில் ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications