ஆளுநர்கள் இனி மசோதாக்களை கிடப்பில் போட்டு காலம் கடத்த முடியாது- உச்சநீதிமன்றத்தின் பொளேர் தீர்ப்பு!
டெல்லி: நாட்டின் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர் நீண்ட காலம் கிடப்பில் வைத்துக் கொண்டு காலம் கடத்த முடியாது; மசோதாக்கள் மீது ஆளுநர் அதிகபட்சமாக 1 மாதத்துக்குள் முடிவெடுத்தாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் பலவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இப்படி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவியோ, மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைத்தது; 2- வது முறையாக அனுப்பிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என காலம் கடத்தி வந்தார். இதனால்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது; ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.
அத்துடன், மாநிலங்களின் சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் காலம் கடத்துவதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி,
- மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்டு முதல் முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது 3 மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்
- ஆளுநர் திருப்பி அனுப்பி மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 1 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்
- ஜனாதிபதிக்கு அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும்
என்று ஒரு காலக்கெடு முதல் முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது இனிமேல், சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துக் கொண்டு ஆளுநர்கள் காலம் கடத்திக் கொண்டு இருக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கி இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் இன்றைய சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.
மேலும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமக்கான சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது; இதனால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்; தற்போது அதே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications