18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் போட்டுக்கொள்ளலாம்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு நாட்டில் இரண்டு லட்சத்தைக் கடந்தது.
கொரோனா கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தற்போது நாட்டில் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகரித்து வருவதால் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இருப்பினும். இது குறித்து அரசு எவ்வித முடிவையும் எடுக்காமலேயே இருந்தது.

18 வயதைக் கடந்த அனைவருக்கும் அனுமதி
இந்நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளின் மூன்றாம் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அதிகாரிகளுடன் இன்று தொடர்ந்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அதைத் தொடர்ந்தே தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரே ஆயுதம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், தடுப்பூசி மட்டுமே நமக்கு இருக்கும் மிகப் பெரிய ஆயுதம். அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதை மருத்துவர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குக் கடந்த வாரம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்
முதலில் இந்தியாவில் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்த மற்ற நோய்கள் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications