சென்னை கூடுவாஞ்சேரி சிவன் கோயில் இடத்தில் வணிக வளாகமா? உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
டெல்லி: கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி, நிர்வாக அதிகாரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம் நந்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடம் தொடர்பாக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம் நந்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவது தொடர்பான டெண்டரை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற பக்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலத்தில் கோவில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட முடியாது எனக்கூறி, வணிக வளாகம் கட்டுவது தொடர்பான டெண்டரை ரத்துசெய்து அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.
கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டுவதற்கு பதிலாக அந்த தொகையை வங்கியில் பிக்சட் டெபாசிட்டாக முதலீடு செய்து இருக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், தற்போது கட்டப்பட்டுள்ள வணிக வளாக கட்டிடத்தை ஏழை எளியவர்களுக்கு திருமணங்கள் நடத்திக்கொள்ளவும் அன்னதான சத்திரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலின் நிர்வாக அலுவலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நிர்வாக அலுவலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, ஜெய்ப்பூர் மாநகரத்தில் கோயிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை சுட்டிக்காட்டியதுடன், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் வாதிட்டார்.
எதிர்மனுதாரர் பாஸ்கர் சார்பில் மூத்த வக்கீல்கள் ரஞ்சித் குமார், வினய் நாவ்ரே, ருச்சி கோலி ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என வாதத்தை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. மேலும், கோயில் நிலத்தில் வணிக வளாகம் கட்டும் டெண்டரை ரத்துசெய்த உத்தரவை எதிர்த்த கோயிலின் நிர்வாக அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications