'பில்கிஸ் பானு' குற்றவாளிகள் 3 பேர் சரணடைய அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு- என்ன உத்தரவு வரும்?
டெல்லி: குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 3 பேர் சரணடைவதற்கு கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதியதாக மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்க இருக்கும் உத்தரவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கின் 11 குற்றவாளிகளும் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை முதலில் நாடினர். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனால் உச்சநீதிமன்றத்துக்கு சென்றனர் 11 குற்றவாளிகள். உச்சநீதிமன்றமோ குஜராத் மாநில அரசு முடிவெடுக்கலாம் என சொன்னது. குஜராத்தில் ஆளும் பாஜக அரசு, 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்தது.
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பில்கிஸ் பானுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர்கள் ரேவதி லால், சுபாஷினி அலி மற்றும் ரூப்ரேகா வர்மா களத்தில் நின்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 11 குற்றவாளிகளின் முன்விடுதலையை ரத்து செய்தது. மேலும் 11 குற்றவாளிகளும் 2 வாரங்களில் சரணடைய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளிகள் சரணடைவதற்கான கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.
ஆனால் பில்கிஸ் பானு குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் குஜராத் மாநில பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கின் 3 குற்றவாளிகள், தாங்கள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் புதியதாக மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் சரணடைய 4 முதல் 6 வாரங்கள் அவகாசம் தர வேண்டும் என அம்மனுவில் குற்றவாளிகள் 3 பேரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்மனு மீது உச்சநீதிமன்றம் பிறப்பிக்க இருக்கும் உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications