மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல்
டெல்லி: ‛‛மத்திய அரசின் செயல்பாட்டால் இந்தியாவில் இருந்து 7 உலக பிராண்டுகள், 9 தொழிற்சாலைகள் வெளியேறி உள்ளன. 649 டீலர்ஷிப்புகள், 84 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோய் உள்ளது. மோடி அவர்களே ‛Hate In India' மற்றும் ‛Make In India' ஆகியவை ஒன்றாக இருக்க முடியாது. வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டிய நேரம் இது'' என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி தினமும் பொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பின்மை பற்றி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

மன்மோகன் சிங் விமர்சனம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், ராகுல் காந்தி ஆகியோர் பாஜகவை கடுமையாக விமர்சித்தனர். இவர்கள் மூவரும் மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதோடு, வேலையிழப்பு அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களோடு விமர்சித்தனர்.

ராகுல்காந்தி பட்டியல்
இந்நிலையில் தான் நாட்டில் இருந்து வெளியேறிய நிறுவனங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் இருந்து எளிமையாக தொழில் நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. 7 உலக பிராண்டுகள், 9 தொழிற்சாலைகள் இந்தியாவில் இருந்து வெளியேறி 649 டீலர்ஷிப்புகள், 84 ஆயிரம் வேலைவாய்ப்புகள் பறிபோகி உள்ளன. மோடி அவர்களே ‛Hate In India' மற்றும் ‛Make In India' ஆகியவை ஒன்றாக இருக்க முடியாது. இத்தகைய செயலுக்கு பதிலாக இந்தியாவில் பேரழிவு ஏற்படுத்தும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான்'' என குறிப்பிட்டுள்ளார்.

படம் பகிர்வு
மேலும் இந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் இந்தியாவில் இருந்து வெளியேறிய நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், 7 உலக பிராண்ட் நிறுவனங்களின் பெயர்களும், அந்த நிறுவனங்கள் வெளியேறிய ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
நம்பிக்கை இழந்த 45 கோடி பேர்
முன்னதாக நேற்று ராகுல்காந்தி, ‛'புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' காரணமாக 45 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்'' என குறிப்பிட்டு இருந்தார். மேலும், ‛‛கடந்த ஐந்தாண்டுகளில் 2.1 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்'' என வெளியான செய்தியை மேற்கொள் காட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications