இது என்னோட மகனே இல்லை.. மோடி மகன்.. உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட காஷ்மீர் மாணவரின் தந்தை நெகிழ்ச்சி
டெல்லி: போர் நடக்கும் உக்ரைனில் இருந்து இந்திய மாணவ-மாணவிகள் மத்திய அரசால் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீரை சேர்ந்த மாணவரின் தந்தை கண்ணீர் மல்க உருக்கமாக நன்றி கூறினார். மேலும், ‛‛ போருக்கு மத்தியில் மீட்டதால் இது பிரதமர் நரேந்திர மோடியின் மகன்' என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 3வது வாரமாக போர் தொடர்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
உக்ரைன் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆபரேஷன் கங்கா
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ‛ஆபரேஷன்' கங்கா மூலம் தனியார், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து அவர்கள் விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர். மீட்பு பணிகளை மத்திய அமைச்சர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

‛சுமி’ மாணவர்கள்
இந்நிலையில் இன்று காலை 3 விமானங்களில் 674 மாணவர்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தனர். ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும், இந்திய விமானப்படை விமானம் ஹிண்டான் விமானதளத்திலும் தரையிறங்கியது. இந்த 3 விமானங்களில் வந்திறங்கிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமியில் சிக்கி தவித்தவர்கள் ஆவார்கள்.இங்கு தான் அதிக போர் பதற்றம் நிலவியது.

வரவேற்பு
இதனால் டெல்லி விமான நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர் காத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து மாணவர்கள் வெளியே வர அவர்களை கட்டித்தழுவி, முத்தம் கொடுத்து வரவேற்றனர். பல மாணவர்களுக்கு மாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சில பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினர். மேலும் ‛பாரத் மாதா கீ ஜே' எனும் கோஷம் முழங்கப்பட்டது.

பிரதமர் மோடியின் மகன்
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த சஞ்சய் பண்டித் என்பவர் கண்ணீர் மல்க பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛என் மகன் உக்ரைன் சுமியில் தவித்தான். சுமியில் நிலவிய பதற்றமான சூழலால் என் மகன் வருவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உக்ரைனில் இருந்து மீட்டு வந்ததால் இவன் பிரதமர் நரேந்திர மோடியின் மகன். என் மகன் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications