டெல்லியை திணறடிக்கும் வெள்ளம்.. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்.. ஆக்ரோஷம் அடைந்த யமுனை நதி!
டெல்லி: கனமழை காரணமாக டெல்லியில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
யமுனை ஆற்றில் தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு டெல்லியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெள்ளம் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை மிதமான வானிலை நிலவ வாய்ப்பு உள்ளதாகவும், பிற்பகலுக்கு பின் அங்கே கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முழுக்க டெல்லியில் கனமழை பெய்ததால் யமுனை ஆற்றில் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெல்லியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ராஜ்காட் பகுதி, டெல்லி சட்டசபை பகுதி, செங்கோட்டை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள சாலைகளில் கூட தண்ணீர் தேங்கி உள்ளது.
1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் அதிக மழையை டெல்லி பதிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில் தேசிய தலைநகரில் 153 மிமீ மழை பெய்தது, அதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் 107 மிமீ மழை பெய்தது. அதிக மழை பெய்த ஜூலை மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வெள்ளம் காரணமாக சிவில் லைன்ஸ், நிகாம் போத் காட், போட் கிளப், பாண்டவ் நகர் பகுதிகளில் போக்குவரத்து மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மக்கள் வீட்டில் இருந்தே வேலை பாருங்கள், அலுவலகம் வர வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அறிவித்துள்ளார்.
அங்கே விடாமல் பெய்து வரும் மழை காரணமாக கடந்த புதன்கிழமை பிற்பகல் டெல்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட அளவான 207.49 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.
இதேபோல் வியாழன் இரவு 7 மணிக்கு நிலை 208.66 மீட்டராக இருந்தது, வியாழன் இரவு முதல் படிப்படியாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு தண்ணீர் உயர்ந்த காரணத்தால் அருகே இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தற்போது அங்கே யமுனை ஆற்றில் நீர் மட்டம் 206 மீட்டராக உள்ளது.
மழை பின்னணி: டெல்லியில் யமுனை ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மழை ஓய்ந்தும் யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம் காரணமாக சாலைக்குள் தண்ணீர் தேங்கி உள்ளது. நீர் சூழ்ந்ததால் சாலைகள், குடியிருப்புகள் பலவும் குளம் போல் மாறி உள்ளன. இந்த வெள்ளம் காரணமாக யமுனை ஆற்றின் அருகே இருக்கும் பல்வேறு மெட்ரோக்கள் மூடப்பட்டு உள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி உள்ளனர். காந்தி நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் கூட தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோடு தற்போது வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக மஜ்னு கா திலா பகுதி மற்றும் காஷ்மீரி கேட் ISBT உடன் இணைக்கும் சாலை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இது அதிக மக்கள், முக்கியமாக அரசியல் தலைவர்கள் பயணம் செய்யும் சாலை ஆகும். இந்த பாதிக்கப்பட்ட பகுதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு மிக அருகில் உள்ள பகுதி ஆகும். அதேபோல் டெல்லி சட்டசபைக்கு 500 மீட்டர் தொலைவில் இந்த பகுதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் நுழைவு வாசல் பகுதி வரை வெள்ளம் ஏற்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேசிய தலைநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்படும் என டெல்லி அறிவித்துள்ளது. டெல்லி ஐடிஓ, செங்கோட்டை, யமுனா பேங்க் மெட்ரோ மற்றும் ராஜ்காட் ஆகியவை டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். இங்குதான் வெள்ளம் அதிக அளவில் தேங்கி உள்ளது.
முக்கியமாக டெல்லியின் செங்கோட்டை பகுதியின் வாசல் வரை வெள்ளம் வந்துள்ளது. செங்கோட்டை இருக்கும் பகுதியே தாழ்வான பகுதி ஆகும். அதன் முன்பக்கம் இருக்கும் நீர் செல்லும் பகுதி காரணமாக செங்கோட்டை உள்ளே தண்ணீர் செல்லவில்லை. மற்றபடி செங்கோட்டையின் முன் இருக்கும் சாலை முழுக்க வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் செங்கோட்டை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் காஷ்மீர் கேட், ஐடிஓ, சந்த்கிராம் அகடா, சிவில் லைன்ஸ், நிகாம் போத் காட், போட் கிளப், பாண்டவ் நகர், காந்தி நகர் மற்றும் பஜன்புராவை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவமனைக்குள்ளும் டெல்லியில் தண்ணீர் புகுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications