டெல்லியில் பேய்க் காற்றுடன் கனமழை.. நொய்டா மேம்பாலத்தில் பெயர் பலகை சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இத்தனை நாளாக வாட்டி வதைத்த வெயிலில் இருந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ந்தனர்.
காசியாபாத், குர்கான், மானேசர், ஃபரீதாபாத், நொய்டா ஆகிய பகுதிகளில் இடியுடனும் புயல் காற்றுடனும் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தனது ஆய்வில் தெரிவித்தது.

அது போல் ஹரியானாவில் பானிபட், கர்னால், ரோத்தக், சார்கி பகுதியிலும் உத்தரப்பிரதேசத்தில் மதுரை, அலிகார், புலந்த்சாகர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் வடக்கு ராஜஸ்தானில் புயலின் சுழற்சியால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்தது.
அடி அடியென அடித்து துவைத்த மழையால் வீடுகளில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. டெல்லி - நொய்டா மேம்பாலத்தில் இருந்த பெயர்ப் பலகை சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த மழையால் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் தணிந்து ஈரப்பதம் நிலவும். இதனால் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளிலும் டெல்லியிலும் மழை வரும். ஜூன் 15-ஆம் தேதி வரை வெப்பம் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications