தமிழக எதிர்ப்பு எதிரொலி: இந்தியை எந்த மாநிலத்திலும் திணிக்கவே மாட்டோம்... 'பதறும்' மத்திய அரசு
Recommended Video
டெல்லி: இந்தியை எந்த ஒரு மாநிலத்திலும் திணிக்கவே மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரரி ரங்கன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமது அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பித்தது.
இதையடுத்து கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இப்பரிந்துரைகள் மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

மும்மொழி கொள்கை
கஸ்தூரி ரங்கன் குழுவனாது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. மாணவர்கள் கட்டாயம் இந்தியை ஒரு பாடமாக படிக்க வேன்டும் என பரிந்துரைத்துள்ளது.

தமிழக அரசு எதிர்ப்பு
இது இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் அரசியல் கட்சித் தலைவர்களும் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்போம்; தமிழ்- ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையே போதும் என தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அரசின் கொள்கை என்பது இருமொழிக் கொள்கைதான். அதைத்தான் பின்பற்றுவோம் என்றார். அதேபோல் கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் தமிழகம் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும்; மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என கூறியிருந்தார்.

தலைவர்கள் கடும் எச்சரிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் தமது அறிக்கையில், இந்தியை திணித்தால் திமுக போர் தொடுக்கும் என பிரகடனம் செய்தார். மதிமுக பொதுச்செயலர் வைகோ, இந்தியை திணித்தால் மீண்டும் 1965-ம் ஆண்டு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரித்தார். வைரமுத்து உள்ளிட்ட படைப்பாளிகளும், இந்தியை திணிக்கமாட்டோம் என்கிற நேருவின் உறுதிமொழியை கைவிடக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் தமிழகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

சர்வதேச அளவில் டிரெண்டிங்
சமூக வலைதளங்களிலும் இந்திக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆகின. இதையடுத்து தமிழக பாஜக தலைவர்களும் இந்தியை திணிக்கமாட்டோம் என கூறத் தொடங்கினர். அதே நேரத்தில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா உள்ளிட்டோர் இந்திக்கு வக்காலத்து வாங்கி பதிவுகளைப் போட்டனர். இதனால் நெட்டிசன்களிடம் கடுமையான வசவுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசு பின்வாங்கியது
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியா, மும்மொழிக் கொள்கை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு அல்ல. கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரை மட்டுமே. இந்த பரிந்துரையைத்தான் மத்திய அரசின் முடிவு என புரிந்து கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு மாநிலத்திலும் இந்தி மொழியை நாங்கள் திணிக்கவே மாட்டோம் என கூறியுள்ளார்.

மத்திய அரசின் முடிவு அல்ல
இதேபோல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், வெளியானது கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கைதான். இது மத்திய அரசின் முடிவு அல்ல. இதை மத்திய அரசின் கொள்கை முடிவு என கூறுவது தவறு. அப்படி புரிந்து கொள்ளக் கூடாது என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications