பீகாரில் காங்கிரஸ் கட்சியின் வரலாறு.. 1990க்கு பிறகு எல்லாமே காலி.. சறுக்கியது எங்கே
டெல்லி: பீகார் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று, போதிய கல்வி கற்கும் வாய்ப்பு, தொழில்நுட்ப புரட்சி, உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்றவை நிகழவில்லை. வற்றாத கங்கை நதி ஓடியும் வறுமையில் இருக்கிறது. பீகாரை பொறுத்தவரை
சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி 1947 முதல் 1967 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தது. அதன்பிறகு விட்டு விட்டு ஆட்சி செய்தது. 1990கள் வரை காங்கிரஸ் ஆண்டது. அதன்பிறகு இன்று வரை காங்கிரஸ் ஆட்சிக்குவரவே இல்லை.
பீகாரின் காங்கிரஸ் வரலாறை சற்று விரிவாக பார்ப்போம். பீகாரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, அதன் முதல் முதலமைச்சரான ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா 1961 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இறக்கும் வரை, நிலையானதாக இருந்தது. அதன் பிறகு, 1967 ஆம் ஆண்டு நான்காவது சட்டமன்றத் தேர்தல் வரை பல காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவி வகித்தார்கள்.

1961ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியில் தீப் நாராயண் சிங் என்பவர் முதல்வராக இருந்தார். பிப்ரவரி 1, 1961 - பிப்ரவரி 18, 1961 வரை மிக குறுகிய காலம் தான் முதல்வராக இருந்தார். அதன்பிறகு பினோதானந்த் ஜா என்பவர் பிப்ரவரி 18, 1961 - 1963 அக்டோபர் 2 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக இருந்தார். அதன்பிறகு கிருஷ்ணா பல்லப் சஹாய் என்பவர் 1963 முதல் 1967 வரை முதல்வராக இருந்தார்.
பீகாரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக முடிவுக்கு வந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனினும் 1970கள் மற்றும் 1980களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
பீகாரை பொறுத்தவரை எந்த முதல்வரும் சரியாக ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இடைப்பட்ட காலங்கில் இஐருக்கவில்லை.. ஹரிஹர் சிங் ( பிப்ரவரி 26, 1969 - ஜூன் 22, 1969), போலா பாஸ்வான் சாஸ்திரி (ஜூன் 22, 1969 - ஜூலை 4, 1969), தரோகா பிரசாத் ராய்(பிப்ரவரி 16, 1970 - டிசம்பர் 22, 1970), மீண்டும், போலா பாஸ்வான் சாஸ்திரி ( ஜூன் 2, 1971 - ஜனவரி 9, 1972) கேதார் பாண்டே (மார்ச் 19, 1972 - ஜூலை 2, 1973), அப்துல் கஃபூர் (ஜூலை 2, 1973 - ஏப்ரல் 11, 1975), ஜெகன்நாத் மிஸ்ரா (ஏப்ரல் 11, 1975 - ஏப்ரல் 30, 1977 ), ஜெகன்நாத் மிஸ்ரா (ஜூன் 8, 1980 - ஆகஸ்ட் 14, 1983), சந்திரசேகர் சிங் ஆகஸ்ட் 14, 1983 - மார்ச் 12, 1985 போன்றவர்கள் குறுகிய காலமே முதல்வராக இருந்தார்கள்.
இதேபோல் பிந்தேஷ்வரி துபே (மார்ச் 12, 1985 - பிப்ரவரி 13, 1988), பகவத் ஜா ஆசாத் (பிப்ரவரி 14, 1988 - மார்ச் 10, 1989),சத்யேந்திர நாராயண் சின்ஹா (மார்ச் 11, 1989 - டிசம்பர் 6, 1989) ஜெகன்நாத் மிஸ்ரா (டிசம்பர் 6, 1989 - மார்ச் 10, 1990), ஆகியோர் 80களின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்தார்கள். ஜெகன்நாத் மிஸ்ரா தான் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வராக இருந்தார். அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்ற பிறகு, பீகாரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என லல்லு பிரசாத் யாதவ் மற்றும் நிதீஷ்குமார் ஆகியோர் தான் பீகாரில் ஆண்டார்கள். நிதீஷ்குமார் 1990களில் கணக்கிட்டு 2025 வரை உள்ள காலத்தை கணக்கிட்டால் 18 ஆண்டுகள் வரை நிதீஷ்குமார் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2015 முதல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ் குமார் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக யார் வெற்றி பெற்றாலும், அவர் தான் முதல்வர் என்கிற நிலையே உள்ளது. லல்லு பிரசாத் யாதவ்வை பொறுத்தவரை 7 வருடம் , 4 மாதங்கள் முதல்வராக இருந்துள்ளார். பீகாரில் நிதீஷ்குமார் தான் முதல்வர் என்பது பல வருடங்களாக தொடர்கிறது. இப்போது 200 தொகுதிகளுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளதால், நிதீஷ் தான் மீண்டும் முதல்வர் ஆகிறார்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மாநில தலைமையை மதிக்காமல் டெல்லி மேலிடமே முடிவுகளை எடுத்து, மாநில தலைவர்களை வளரவிடாமல் தடுத்த காரணத்தால், பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது என்ற குற்றச்சாட்டு வரலாறு முழுக்க உள்ளது. ஒரு முதல்வர் பீகாரில் ஐந்து ஆண்டுகள் இருக்க முடியாத அளவிற்கு உட்கட்சி பூசல் இருந்து வந்தது. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் வலுவான தலைவர்களை இழந்த காரணத்தால் தான் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பீகாரிலும் இன்று வரை ஜெயிக்க முடியாமல் தடுமாறுவதற்கு இதையே அரசியல் நிபுணர்கள் காரணமாக கூறுகிறார்கள்..












Click it and Unblock the Notifications