கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணம்... உள்துறை அமைச்சகம் பதில்!!
டெல்லி: முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் தப்லீக் ஜமாத் நடத்தப்பட்டதும் பலருக்கும் கொரோனா தொற்று நோய் பரவுவதற்கு ஒரு காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ராஜ்ய சபாவில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வியை ராஜ்ய சபாவில் சிவ சேனா எம்பி அனில் தேசாய் கேட்டு இருந்தார். இதற்கு எழுத்துபூர்வ பதில் அளித்து இருந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி, ''டெல்லியில் பூட்டப்பட்ட அறைக்குள் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றாமல், மாநாடு நடத்தப்பட்டதும் பலருக்கும் கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக அமைந்து இருக்கிறது. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. மாஸ்க், சானிடைசர் போன்ற எந்தவித பாதுகாப்பையும் இவர்கள் பின்பற்றவில்லை.
நிசாமுதின் பகுதியில் இருக்கும் இவர்களது தலைமையகத்தில் இருந்து 2020, மார்ச் 29 ஆம் தேதி முதல் 2,361 பேர் டெல்லி போலீசாரால் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
இதுதொடர்பாக ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தலைவர் மவுலானா மொஹம்மது சாத் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.