காஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்
டெல்லி: 18 மாதங்களுக்கு மேல் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் யாரும் வீட்டு காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்றும் வீட்டு காவலில் உள்ள தலைவர்களுக்கு சினிமா பார்க்கும் வசதி, ஜிம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ம்தேதி ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மரை இரண்டு யூனியன் பிரதேசங்களை பிரித்தது.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மாநிலத்தில் இருந்து வெளிமாநில மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

காஷ்மீர் தலைவர்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வெளிஉலக தொடர்பு இல்லாத அளவுக்கு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டம்
காஷ்மீர் தலைவர்கள் வீட்டு காவலில் அடைக்கப்பட்டு 48 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யார் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. பரூக்அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு இருப்பது வைகோவின் வழக்கால் தெரியவந்தது.

வீட்டின் விருந்தினர்கள்
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "18 மாதங்களுக்கு மேல் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் யாரும் வீட்டு காவலில் வைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் வீட்டில் விருந்தினர் போல் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜிம் வசதி அளித்துள்ளோம்
அரசியல் தலைவர்கள் விஐபி பங்களாக்களில் தங்கவைக்கப்ட்டுள்ளனர். அவர்களுக்கு ஹாலிவுட் திரைப்படங்களின் டிவிடிகளை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஜிம் வசதியும் வழங்கப்பட்டள்ளது. அவர்கள் வீட்டுக்காவலில் இல்லை. அவர்கள் வீட்டு விருந்தினர்கள்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications