அப்படியே திராவிட மாடல் அரசியல்.. பாஜகவால் பக்கத்தில் வரமுடியவில்லை.. எப்படி ஜெயித்தார் கெஜ்ரிவால்?
Recommended Video
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆட்சி, அதன் டிரேட் மார்க் மக்கள் நலத் திட்டங்களால், டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 10 மாநில பாஜக முதல்வர்கள், 200 எம்பிக்கள் பிரச்சாரம் செய்தும் கெஜ்ரிவாலின் வளர்ச்சிப் பணிகள் முன்னால் அந்த பிரச்சாரம் மியூட் செய்யப்பட்டுவிட்டது.
அப்படி என்ன வளர்ச்சிப் பணிகளை செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா? குஜராத் மாடல் என்ற பெயரில் முன்னிறுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் போல கிடையாது. இவை அனைத்துமே கண்முன் உதாரணமாக இருக்கும் வளர்ச்சித் திட்டங்கள்.
இதோ 2013 (கூட்டணி ஆட்சி), 2015, 2020 என, கெஜ்ரிவாலின் அபார ஹாட்ரிக் வெற்றிக்கு காரணம் என்ன என்று பார்க்கலாம் வாங்க:

மக்கள் நலன்
20,000 லிட்டர் வரை மாதாந்திர குடிநீர் பயன்பாட்டுக்கு கட்டணம் கிடையாது, 200 யூனிட் வரை மாதாந்திர மின்சார நுகர்வுக்கு கட்டணம் கிடையாது, 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மானிய கட்டணம்தான், அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது, கிளினிக்குகள் திறத்தல், பெண்களுக்கு டி.டி.சி பேருந்துகளில் இலவச பயணம், தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வுக்கான நெறிமுறைகள் போன்றவை மிக முக்கியமான முன்னெடுப்புகளாகும்.

தமிழகம் மாதிரி டெல்லி
கல்வி, சுகாதாரம், பெண்களுக்கான சலுகைகள் என அப்படியே, திராவிட கட்சிகள் மாதிரியில் தமிழகத்தை போலவே டெல்லியையும் முன்னேற்றியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் வாழக்கூடிய நகரம் டெல்லி. பிற வட மாநிலங்களை போல வறுமையில் வாடுவோர் அதிகம் உள்ள நகரம் கிடையாது. எனவே, பாஜகவால், எளிதாக இந்த மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை. ஆனால், அந்த நடுத்தர மக்களுக்கு தேவைப்படும் கல்வியையும், சுகாதாரத்தையும் கைக்கே கொண்டு சென்று கொடுத்து பாஸ் மார்க் வாங்கிவிட்டார் கெஜ்ரிவால்.

பாஜகவால் முடியவில்லை
அதேநேரம், பாஜகவால், பிற வட மாநிலங்களை போல மதரீதியான முன்னெடுப்புகளையோ, அல்லது பிற மத்திய அரசின் நலத் திட்டங்களாலோ டெல்லியை வசப்படுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு, ஏழை குடும்பங்களிலுள்ள, பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ், 77,000 இணைப்புகள் டெல்லியில் அளிக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, டெல்லியிலுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் இது வெறும் 2.2% மட்டுமே. இப்படி பலன் பெற்றவர்களும் முழுமையாக பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்களா என்றால் இருக்காது. மேலும், உஜ்வாலா திட்டத்தால் பலன் பெற்ற பெரிய மாநிலங்களின் பலனாளிகளை ஒப்பிட்டால், டெல்லி பலனாளிகள் எண்ணிக்கை மிக மிக குறைவு.

கெஜ்ரிவால் சமயோஜிதம்
ஜாமியா மிலியா, ஷாஹீன் பாக் போராட்டங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பிரியாணி சப்ளை செய்கிறார் என்று பிரச்சாரம் செய்தது பாஜக. ஆனால், நானா தீவிரவாதி, நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என பதிலுக்கு பிரச்சாரம் செய்தார் கெஜ்ரிவால். ஆனால் மாறாக, மோடிக்கு எதிராக அவர் ஆவேச கணைகளை வீசவில்லை. அதன் மூலம், மதரீதியாக வாக்குகளை ஈர்க்கும் பாஜக முயற்சியை கண்டறிந்து நழுவிவிட்டார் கெஜ்ரிவால். இவர் செய்த பிரச்சாரம் எல்லாமே தற்காப்பு மட்டுமே, பதிலடி அல்ல.

வலுவான டீம்
நான் கொண்டுவந்த திட்டங்களை பாருங்கள் என்று கூறி பிரச்சாரம் செய்தாரே தவிர, பாஜகவை குறைகூறி இல்லை. மேலும், தனது வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் அனைத்து மக்களையும் சென்று சேர தனது வலுவான சோஷியல் மீடியா டீமை பக்காவாக பயன்படுத்தினார் கெஜ்ரிவால். பிரசாந்த் கிஷோரும் பக்கபலமாக இருந்தார். வாய்ஸ் மெசேஜ்கள் அனுப்புவது, தானியங்கி தொலைபேசியில் அழைத்து திட்டங்களை அறிவிப்பது என வேற லெவல் களப்பணிகளில் இறங்கியது ஆம் ஆத்மி டீம். ஆனால் அத்தனையுமே, வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லை உள்ளடக்கியே இருந்தது. எனவேதான், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றவற்றை முன்னிறுத்தி பாஜக தலைவர்கள் செய்த பிரச்சாரத்தையும், மதரீதியிலான பிரச்சாரத்தையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை டெல்லிவாலாக்கள்.












Click it and Unblock the Notifications