இப்படித்தான் தண்ணீர் உள்ளே போனதா? டெல்லி பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்த சிசிடிவி காட்சி
டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் பேஸ்மேண்டில் உள்ள அறையில் வெள்ள நீர் புகுந்ததில் இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் பலியாகினர். இந்த சம்பவத்தில் பயிற்சி மையத்தின் அடித்தளத்திற்குள் வெள்ளம் நீர் எப்படி புகுந்தது என்பது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால், அங்கே தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, மத்திய டெல்லியில் உள்ள பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் ராவ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரை தளத்திலும் நேற்று திடீரென வெள்ள நீர் புகுந்தது.

தரைத்தளம் மூழ்கியது: பயிற்சி மையத்தின் தரைதளத்தில் தான், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான 80 சதவீத புத்தகங்கள் இருந்து இருக்கின்றன. இதனால், நேற்று இரவு 7 மணியளவில் இந்த நூலகத்தில் மாணவ - மாணவிகள் பலர் இருந்தனர். அப்போது பலத்த மழை காரணமாக பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் திடீரென தண்ணீர் புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தீ அணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
3 பேர் பலி: எனினும், மூன்று பேர் சடலமாக மீட்கபட்டனர். இந்த சம்பம் தேசிய தலைநகரில் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி மையத்தின் தரை தளத்தில் ஸ்டோர் ரூம் இருக்கும் என தீ அணைப்புத்துறையிடம் என்.ஓ.சி வாங்கிவிட்டு விதிகளை மீறி நூலகம் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. விதி மீறலில் ஈடுபட்டு 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான பயிற்சி மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஞ்சலி செலுத்தி போராட்டம்: இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்த மாணவிகள் மற்றும் மாணவர் புகைப்படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
சிசிடிவி காட்சி: டெல்லியில் மழை நீர் வடிகால் பணிகள் சரியாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் ஆளும் ஆம் ஆத்மி மீது முன்வைத்துள்ளது. இதனிடையே பயிற்சி மையத்திற்குள் எப்படி தண்ணீர் புகுந்தது என்பது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சாலையில் முட்டளவு தண்ணீரில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
மளமளவென புகுந்த நீர்: அப்போது ஒரு எஸ்யூவி கார் ஒன்று வெள்ள நீருக்குள் சென்று கொண்டிருக்கிறது. கார் சென்ற வேகத்தில் தண்ணீர் வேகமாக அடித்து செல்லப்படுகிறது. இதில் பயிற்சி மையத்தின் கேட் திறக்கப்பட்டு எட்டு அடி ஆழத்தில் இருந்த அடித்தளத்திற்குள் தண்ணீர் மளமளவென புகுந்து செல்கிறது.
இதை எதிரே இருந்த கட்டிடம் ஒன்றில் இருந்தபடி மாணவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து இருக்கிறார்கள். சில மாணவர்கள் எச்சரிக்கை விடுப்பது போல எதோ சொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications