ராஜீவ் மரணத்தை எப்படி சமாளிச்சீங்க? ஒற்றை கேள்வியால் சோகமான சோனியா, ராகுல்! பிரியங்கா உருக்கம்
டெல்லி: டெல்லி வீட்டில் பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடியபோது பெண் விவசாயி ஒருவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் பற்றி கேள்வி கேட்டதால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடைந்து போயினர். அதுவரை கலகலப்பாக மகிழ்ச்சியுடன் பேசிய மூவரும் அமைதியான நிலையில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அளித்த உருக்கமான பதில் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் ஹரியானா மாநிலம் சோனிபேட் அருகே பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடி நாற்று நடவு செய்தார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையதளங்களில் வெளியானது.

அப்போது பெண் விவசாயிகள் சிலர், ‛‛நாங்கள் டெல்லிக்கு அருகே இருந்தாலும் அங்கு வந்தது இல்லை. எங்களுக்கும் டெல்லியை பார்க்க விரும்பமாக உள்ளது'' என தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் காந்தி டெல்லிக்கு விருந்துக்கு அழைப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி ராகுல் காந்தி ஹரியானா மாநில பெண் விவசாயிகள் 10க்கும் அதிகமானவர்களை வேனில் டெல்லியில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் இல்லத்துக்கு அழைத்து வர வைத்தார். பெண் விவசாயிகள் தங்களின் குழந்தைகளுடன் அங்கு வந்தனர். அவர்களை ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
அதன்பிறகு பெண் விவசாயிகள் தங்களின் வீட்டில் நெய்யில் செய்த இனிப்பு வகைகள், லஸ்ஸி, ஊறுகாய் உள்ளிட்டவற்றை ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் வழங்கினர். அதனை அவர்கள் சிரித்த முகத்துடன் பெற்று கொண்டனர். அதன்பிறகு பெண் விவசாயிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்த வேளையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அவர்களிடம் கலந்துரையாடினர்.
இந்த வேளையில் பெண் விவசாயி ஒருவர், ‛‛ராஜீவ் ஜி மரணமடைந்தபோது உங்களின் மகன், மகள் இளம் வயதில் இருந்தனர். அத்தகைய சூழலை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?'' என சோனியா காந்தியிடம் கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் சோனியா காந்தி, ‛அதிகமாக என்னை பாதித்தது'' என்று மட்டும் கூறி அமைதியானார்.
இதையடுத்து பிரியங்கா காந்தி தழுதழுத்த குரலில் தனது தாய் சோனியா காந்தி பட்ட கஷ்டங்களை எடுத்து கூறினார். பிரியங்கா காந்தி கூறுகையில், ‛‛அந்த சம்பவம் அதிகம் பாதித்தது. அது ஏற்படுத்திய காயங்கள் மிக ஆழமானது. நீண்டகாலமாக என தாய் ‛அப்செட்' ஆகியிருந்தார். உணவு, தண்ணீர் இன்றி பல நாட்கள் அவர் வருத்தமாக இருந்தார். அது மிகவும் கொடூரமான நேரம்'' எனக்கூறி கலங்கினார். ராகுல் காந்தியின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. இதை பார்த்த இன்னொரு பெண் விவசாயி, ‛‛கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்'' எனக்கூற சோனியா காந்தி சிரித்தார். இந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தவர். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் ராகுல் காந்தி 21 வயது நிரம்பியவராகவும், பிரியங்கா காந்தி 19 வயது நிரம்பியவராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications