நமது வீரப் படைகளுக்கு தலை வணங்குகிறேன்!.. தாய்மார்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம் - பிரதமர் மோடி
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்திய முப்படைகள் இணைந்து நடத்தின. இதைத்தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பேசிய பிரதமர் மோடி நாட்டின் வீரப் படைகளுக்கும், உளவுத் துறைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா தரப்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே பயங்கரமான தாக்குதல் நடைபெற்றன. இதனிடையே நேற்று முன்தினம் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன என்று அறிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றன. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் டிரோன் பறந்தன. பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியாவும் அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை. இருப்பினும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி தற்போது உரையாற்றி வருகிறார். இதில் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் திறன் கடந்த சில நாள்களில் உறுதியுடன் வெளிப்பட்டுள்ளது. நமது வீரப் படைகளின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன் . நாட்டின் படைகளுக்கும், உளவுத் துறைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
பஹல்காம் தாக்குதல் மிகுந்த மனவலியை ஏற்படுத்தியது. துளியும் கருணை இல்லாமல் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர்.
அப்பாவிகளை கொன்றது கொடூரமானது. காஷ்மீர் தாக்குதல் மக்களை கலக்கமடையச் செய்து. குடும்பத்தினர் கண் முன்னே சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. நமது வீரப் படைகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் குறிக்கோளை வெற்றிகரமாக எட்ட நடவடிக்கை எடுத்தார்கள். தாய்மார்கள், சகோதரிகள், நாட்டின் மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications