ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்பதை கற்பனை கூட செய்யவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்!
டெல்லி: "நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அடியெடுத்து வைத்தபோது கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன். ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்பதை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை" என பிரதமர் மோடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் உருக்கமாகப் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த கூட்டத்தில் சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கியது.

இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் மோடி, "வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாம் அனைவரும் நன்றி கூற உள்ளோம். ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது உண்மை தான். ஆனால் இது பல இந்தியர்களின், கடின உழைப்பால், இந்தியர்களின் பணத்தால் கட்டப்பட்டது என்பதை மறக்கக்கூடாது.
இந்த நாடு எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்து, இத்தனை மதிப்பையும், அன்பையும் அளிக்கும் என நினைக்கவில்லை. குஜராத் ரயில் நிலையத்தில் டீ விற்று, ரயில் நிலையத்தில் தூங்கிய ஒரு ஏழை, இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அடியெடுத்து வைத்தபோது கீழே விழுந்து வணங்கிவிட்டே நுழைந்தேன். ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்பதை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.

ஜி 20 உச்சி மாநாட்டில் தெற்கு உலகின் குரல்களை ஓங்கி ஒலித்தோம். ஜி20 மாநாட்டின் மூலம் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது, இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 மாநாட்டினால் விடையளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்துள்ளது.
அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வருகிறது. எந்தவித இடையூறுமின்றி இந்தியா தனது குறிக்கோளை அடையும் என நம்பிக்கை எழுந்துள்ளது. 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக நாம் உருவாக்கிட வேண்டும்.

நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றம், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக இருக்கும், பெண் எம்பிக்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பல தடைகளை தாண்டி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். கொரோனா காலத்திலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டோம்.
மக்கள் நாடாளுமன்றத்தை நம்புகின்றனர். நாடாளுமன்றம் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நேரு, வாஜ்பாய், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்." என உரையாற்றியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications