'டார்கெட்' ஆர்எஸ்எஸ் கோட்டை நாக்பூர்-படையெடுக்கும் "இந்தியா" அணி- 5 லட்சம் பேருடன் பிரம்மாண்ட பேரணி?
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக நவம்பர் முதல் வாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் 'புனித' தலமாக போற்றப்படும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி 5 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக பாஜகவை எதிர்த்து 27 பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னா (பீகார்), பெங்களூர் (கர்நாடகா) மற்றும் மும்பை (மகாராஷ்டிரா)வில் நடைபெற்றன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் கூட்டணி பெயர், கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான குழுக்கள் உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டன.

5 மாநில சட்டசபை தேர்தல்: இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2-ந் தேதி மத்திய பிரதேசத்தின் போபாலில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. தற்போது தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ராகுல்- மமதா ஆலோசனை: இப்பின்னணியில் சில நாட்களுக்கு முன்னர் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது "இந்தியா" கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, "இந்தியா" கூட்டணியின் போபால் பேரணி திட்டமிட்டதைப் போல மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிரம்மாண்ட பேரணியை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. நவம்பர் முதல் வாரத்தில், மேற்கு வங்க மாநில பூஜை கொண்டாட்டங்களுக்கு நடுவே நாக்பூரில் சுமார் 5 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்ட பேரணி நடத்தலாம் எனவும் கலந்துரையாடி உள்ளனர்.
பரபர ஆலோசனை: இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருடனும் காங்கிரஸ் தலைமை விவாதித்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாக்பூரில் "இந்தியா" கூட்டணி பேரணி நடத்துவது மிக பொருத்தமானதாக இருக்கும் என்பது அதன் தலைவர்களின் கருத்தாகும்.
நாக்பூர் ஏன்?: மத்தியில் ஆளும் பாஜக அரசின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இதன் தலைமையகம் நாக்பூர். இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கோட்டை என்றே கருதப்படுகிறது. பாஜகவினருக்கு ஒருவகையில் புனித தலம் போன்றது. ஆகையால் நாக்பூரில் 5 லட்சம் பேரை திரட்டி பிரம்மாண்ட பேரணியை நடத்தினால் 5 மாநில தேர்தலிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதாலேயே "இந்தியா" கூட்டணி புதிய படையெடுப்புக்கு தயாராகிவிட்டதாம்.












Click it and Unblock the Notifications